காஞ்சிபுரத்திலுள்ள  தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகியின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.



 

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் ,

 

ஓர்  ஆண்டுக் கால  திமுக ஆட்சியிலே  எதிர்பார்த்த மக்கள் இன்றைக்கு ஏமாந்து போய்  இருப்பது வருத்தத்துக்குரியது, கொடுத்த முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக திமுக  செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது. தமிழகத்தில் மட்டும் கல்வியை அரசியல் ஆக்குவது ஒருபோதும் ஏற்புடையதல்ல,புதிய கல்விக் கொள்ளையில்  ஏற்படும் சந்தேகங்களை விளக்க மத்திய அரசு இருக்கும்போது, இதனை முறையாக எடுத்துக் கொண்டு சென்று சந்தேகங்களை தீர்க்க வேண்டியது அரசின் கடமை, இந்த புதிய கல்விக் கொள்கையைப் பற்றி தமிழக அரசு பல ஆலோசனைகளை கூறலாம் ஆனால் எதையும் செய்யாமல் கண்மூடித்தனமாக  எதிர்ப்பது ஏற்புடையதல்ல, கல்வியிலே  அரசியலை  புகட்டுவது  பெற்றோர்களும் மாணவர்களும் 100 சதவிகிதம்  ஏற்புடையதல்ல என செய்தியாளர் சந்திப்பின்போது கூறினார்.



 


இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், நீட் தேர்வு பிரச்சனையில்  இறுதி முடிவு  உச்ச நீதிமன்றத்தில் அடிப்படையில் இருக்கிறது, கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக நீட் தேர்வில் பிற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழ்நாட்டில்  சிறப்பாக செயல்படுவது தெரிய வருகிறது ,குறிப்பாக கிராமத்து மாணவர்கள் கூட சிறப்பாக செயல்படுவது தான் உண்மையான நிலை.


 

மக்கள் நலனிலே அக்கறைக்கொண்ட ஆட்சியாளர்களாக மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற காரணத்தால் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை குறைத்து, மக்கள் மீது உள்ள சுமையை மத்திய அரசு குறைத்து வருகிறது, இனிவரும் நாட்களிலும் மத்திய அரசு விலையினை  குறைக்கும்,ஆனால் திமுக அரசு பெட்ரோல் டீசல் கேஸ் விலையை குறைக்க மாட்டோம், சொத்து வரியை உறுதியாக உயர்த்துவோம் என சொல்லுவது மட்டுமல்லாமல், ஆண்டுக்கு ஒருமுறை சொத்துவரியினை  உயர்த்துவோம்  என கூறுவது மக்கள் விரோதபோக்கு. மேலும் மக்கள் மீது ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு, உண்மையிலேயே தமிழக மக்கள் மீது தமிழக அரசுக்கு  அக்கறை இருக்கிறது என்றால் தமிழக மக்களின் சுமைகளை குறைக்க வேண்டுமென்றால்  மத்திய அரசுக்கு துணை நின்று பெட்ரோல் டீசல் விலையை தன் பங்கிற்கு  குறைக்க வேண்டும், அதை தான் இன்றைக்கு  மக்களும்,வாக்களித்தவர்களும் இந்த திமுக ஆட்சியிலே  எதிர்பார்க்கிறார்கள்

என தெரிவித்தார்.