கிண்டல் செய்த வாலிபரை கல்லால் அடித்துக் கொன்ற நான்கு பேர் கைது
சென்னை எண்ணுார், இந்திரா நகர், அய்யப்பன் கோவில் தெருவை சேர்ந்த சரத் என்ற சரத்குமார் ( வயது 31 ) கூலி வேலை பார்த்தார். இவர் ராமமூர்த்தி நகர் பிரதான சாலையில் நடந்து சென்ற போது சிலர் திடீரென சரத் மீது கற்களை வீசி தாக்கி விட்டு தப்பினர். இதில் படுகாயம்டைந்த சரத்தை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து எண்ணுார் போலீசார் அடிதடி வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
மேலும் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை வைத்து, தாக்குதலில் ஈடுபட்ட தாழங்குப்பம், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ஜான்சன் ( வயது 18 ) லோகேஷ்வரன் ( வயது 21 ) இந்திரா நகரைச் சேர்ந்த சஞ்சய் ( வயது 18 )திலகர் நகரைச் சேர்ந்த பிரதீப்குமார் ( வயது 20 ) ஆகிய நால்வரையும் கைது செய்து விசாரித்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது ;
சரத்தின் தம்பியான சந்தோஷ் , அவனது நண்பர்களோடு சேர்ந்து கைதாகியுள்ள நால்வரின் நண்பரான ஜெயந்தன் என்பவரை சில தினங்களுக்கு முன் கத்தியால் தலையில் வெட்டியுள்ளார்.
ஜெயந்தனின் நண்பர்களான நால்வரும், ராம மூர்த்தி நகர் பிரதான சாலையில் உள்ள ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற போது அங்கு நின்றிருந்த சந்தோஷின் அண்ணன் சரத் , ஜெயந்தன் வெட்டப்பட்டது குறித்து கிண்டல் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் கற்களை வீசி சரத்தை தாக்கி உள்ளனர் என இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கிடையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி சரத் உயிரிழந்தார். எண்ணூர் போலீசார் வழக்கை கொலை வழக்காக மாற்றி, கைதான நால்வரையும் நீதிமன்றத்தில் ரையும் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
குப்பை லாரியின் சக்கரத்தில் சிக்கி 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் , தண்டையார் பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டை கைலாசம் நகர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் கூலித் தொழிலாளி. இவரது மனைவி சரளா. தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
மகள் காவியா ( வயது 8 ) தண்டையார்பேட்டை சோலையப்பன் தெருவில் உள்ள தனியார் பள்ளியில், 2 ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்கு தாமதமாக வந்ததால் ஆசிரியர்கள் சிறுமியை வீட்டிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் சிறுமியை வெங்கடேசனின் உறவினர் ஜனனி ( வயது 17 ) என்பவர் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். ஸ்கூட்டரின் முன்புறம் கேஸ் சிலிண்டரையும் பின்புறத்தில் சிறுமியையும் அமர வைத்து சென்றார்.
தண்டையார்பேட்டை புறநகர் மருத்துவமனை அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் நிலை தடுமாறியதில் ஸ்கூட்டருடன் ஜனனி ஒருபுறமும், சிறுமி மறுபுறமும் சாலையில் விழுந்துள்ளனர். கண்ணிமைக்கும் நேரத்தில், பின்னால் வந்த மாநகராட்சி குப்பை லாரியின் சக்கரம், சிறுமியின் தலை மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே காவியா உயிரிழந்தார்.
இதை பார்த்து பதறிய அப்பகுதி மக்கள், குப்பை லாரி ஓட்டுநரான கொருக்குப்பேட்டையை சேர்ந்த சரண்ராஜ் ( வயது 35 ) என்பவரை பிடித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குப்பை லாரி மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.