காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட பெருநகர் கிராமத்திலுள்ள  மிகப்பெரிய ஏரியான பரனேரி ஏரியின் இரண்டாவது மதகு உடைந்து ஏரியிலிருந்து வெளியேறி வரும் நீரினால் 300 ஏக்கர் விவசாய நிலம் நீரில் மூழ்கி பாதிப்படைந்ததால் விவசாயிகள் கடும் மன வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.



 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருநகர் கிராமத்தில் பரனேரி என அழைக்கப்படும் மிகப் பெரிய ஏரியானது சுமார் 350 ஏக்கர் பரப்பளவு கொண்டும், மூன்று மதகுகளை உடையது. பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி மூலமாக சுமார் 600 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் நீர் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் தற்போது வட கிழக்கு பருவ மழையை ஒட்டி பெய்த மழையினால் இந்த ஏரி முழுவதுமாக நிரம்பியது. இதன் காரணமாக இந்த ஏரியின் நீரினை கருத்தில் கொண்டு சுமார்  300 ஏக்கருக்கு மேலாக விவசாயிகள் பயிர் செய்திருந்தனர்.



 

இந்நிலையில் இன்று இந்த ஏரியின் இரண்டாவது மதகு உடைப்பு ஏற்பட்டு ஏரியிலிருந்து நீர் வீணாக வெளியேறி வருகிறது. ஏரியிலிருந்து வெளியேறி இந்த நீரினால் 300 ஏக்கர் விவசாய நிலங்களில் நீர் சூழ்ந்தும், விவசாயிகள் பயிரிட்டுள்ள நாற்றுகள் அழுகும் நிலையில் உள்ளதாலும், பயிரிடப்பட்ட நவரைப் பட்ட பயிர்கள் முழுவதும் நீர் பாசனம் கிடைக்காததால் விவசாயிகள் கடும் மன வேதனைக்குள்ளாகியுள்ளனர்.

 

குறிப்பாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த ஏரியின் மதகுகளை சரி செய்ய வேண்டும் என மூன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறையிடம் வழங்கியும் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. மேலும்  கடந்த ஆண்டு பெய்த வட கிழக்கு பருவ மழையில் 20க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் கொண்டு இந்த ஏரியின் மதகுகளை தற்காலிகமாக சரி செய்த நிலையில், தற்போது இம்மழையில் மீண்டும் அதே இடத்தில் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.