சென்னையில் இருந்து டெல்லி, வாரணாசி செல்ல வேண்டிய , ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் நான்கும், அதைப்போல் டெல்லியில் இருந்து சென்னை வர வேண்டிய ஏர் இந்தியா இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் 3 மொத்தம் ஏழு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதைப்போல் டெல்லி, ஹைதராபாத், அகமதாபாத், மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் 7 விமானங்கள், ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை தாமதம் ஆகி உள்ளன இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பாதிப்படைந்துள்ளனர்.
கடுமையான குளிர் பனிமூட்டம்
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான குளிர் பனிமூட்டம் மோசமான வானிலை நிலவி வருவதால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக, நாடு முழுவதும் விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றன. அதைப்போல் சென்னை விமான நிலையத்திலும், இன்று 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து இன்று காலை 9.50 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், காலை 10.45 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 11 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், மாலை 5:20 மணிக்கு, வாரணாசி செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 4 விமானங்களும், காலை 8:55 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா விமானம், காலை 9.50 மணிக்கு டெல்லி சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 10:20 மணிக்கு டெல்லி சென்னை ஏர் இந்தியா விமானம், ஆகிய மூன்று வருகை விமானங்கள் உட்பட 7 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
பயணிகள் பாதிப்பு
அதேபோல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து டெல்லி, அகமதாபாத், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் ஏழு விமானங்கள் ஒரு மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன. இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இதற்கிடையே இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறும் போது, வட மாநிலங்களில் மோசமான வானிலை நிலவுவதால் விமானங்கள் தாமதங்கள் ரத்து ஆகின்றன. எனவே சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் பயணிகள், உங்களுடைய விமானங்கள் காலதாமதம் ரத்து குறித்து, தாங்கள் பயணிக்க வேண்டிய விமான நிறுவனங்களுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற் போல், பயணங்களை, அமைத்துக் கொள்ளுங்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.