தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.. ஸ்டாலின் இன்று (23.12.2022) சென்னை, பெரம்பூர், டான்பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்துகொண்டார். விழாவில் அமைச்சர் கே.என். நேரு, அமைச்சர் கே. சேகர் பாபு அவர்களே, மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


முதல்வர் வாய்ப்பே இந்த தொகுதி மக்களால்தான்:


இவ்விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், ஆட்சியில் இருந்தாலும்,  இல்லாவிட்டாலும் இந்த கிறிஸ்துமஸ் விழாவை நாம் தொடர்ந்து கொண்டாடி வருகிறோம். அதிலும் குறிப்பாக என்னை, தொடர்ந்து மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து எதிர்க்கட்சி  வரிசையில் அமையக்கூடிய வாய்ப்பையும், ஆளுங்கட்சி வரிசையில் உட்காரக்கூடிய வாய்ப்பையும், இன்றைக்கு தமிழகத்தின் முதல்வராக அமரக்கூடிய வாய்ப்பையும் எனக்கு வழங்கிக் கொண்டிருக்கக்கூடியவர்கள் நீங்கள், இந்தத் தொகுதி மக்கள். அப்படிப்பட்ட இந்த கொளத்தூர் தொகுதியில் ஒன்பதாவது ஆண்டாக இந்த கிறிஸ்துமஸ் விழா தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட இந்த இனிய விழாவில் உங்களுடன் நான் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.


”அடிக்கடி கிறிஸ்துமஸ் வரக்கூடாதா”


ஆண்டுக்கொரு முறை வரக்கூடிய கிறிஸ்துமஸ் விழாவிலே நான் கலந்து கொள்வதுண்டு. இது ஆண்டாண்டுதான் வரவேண்டுமா? அடிக்கடி வரக்கூடாதா என்ற ஏக்கம் கூட எனக்கு வருவதுண்டு. அந்த அளவிற்கு ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய விழாவாக இந்த விழா அமைந்து கொண்டிருக்கிறது. இங்கே எல்லோரும் எடுத்துச் சொன்னார்கள். இதை ஒரு  மதத்தின் விழாவாக நாம் நினைக்க வேண்டிய அவசியமில்லை.அனைத்து மதத்திற்கும் நல்லிணக்கமாக நடைபெறக்கூடிய  விழாவாக இந்த விழா நடந்து கொண்டிருக்கிறது. அப்படித்தான் எல்லோரும் இங்கு ஒன்று கூடியிருக்கிறோம். 


”நம்பிக்கைகளுக்கு எதிரானதல்ல”


திராவிட மாடல் அரசு என்பது எந்த மதத்தினுடைய நம்பிக்கைகளுக்கும் எதிரானது அல்ல. இன்றைக்கு மதத்தின் பெயரால் அரசியல் நடத்திப் பிழைக்கலாம் என்று நினைக்க கூடியவர்களுக்கு மதத்தின் பெயரால் வன்முறையைத் தூண்டி அதிலே லாபம் பெறலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கக்கூடியவர்களுக்கு எதிரான அரசுதான் இன்றைக்கு உங்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது.


மனிதநேயத்தை வளர்ப்பது தான் திராவிடத்தினுடைய கொள்கை. 


தந்தை பெரியாருடன் குன்றக்குடி அடிகளார் இணைந்து செயல்பட்டார். பேரறிஞர் அண்ணாவோடு, நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களோடு, கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களோடு இணைந்து நின்றார்.


நாம் இனமானப் பேராசிரியர் வள்ளலார் விழாக்களில் பங்கேற்று ஆற்றியிருக்கக்கூடிய உரைகளை யாரும் மறக்க முடியாது.


"‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’"


ஒவ்வொருவரும் அவர்களுடைய கடவுளை வணங்கக்கூடியவர்கள்தான், அடுத்தவர்களின் நம்பிக்கையை மதிப்பவர்கள்தான். ஆனால் அதே நேரத்தில், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பது திருமூலர் வாக்கு. அதைத்தான் திராவிட முன்னேற்றக் .கழகத்தின் பார்வையாகப் பேரறிஞர் அண்ணா அவர்கள் முன்வைத்து, சமத்துவ சமுதாயத்திற்கான சகோதரத்துவ உணர்வை வளர்த்து, சமூகநீதிப் பாதையில் பயணிக்கச் செய்தார்.


திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்கிற தத்துவத்தை எடுத்துவைத்த பேரறிஞர் அண்ணா வழியைப் பின்பற்றி இன்றைக்கு  திராவிட மாடல் அரசு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


திராவிட மாடல்


இயேசுநாதராக இருந்தாலும், அண்ணல் முகமது நபியாக இருந்தாலும், அருட்பிரகாச வள்ளலாராக இருந்தாலும் ஏழையின் பசியைப் போக்கிட வேண்டும், அவர்களின் துன்பங்களைக் களைந்திட வேண்டும் என்பதையே அருள்நெறியாக முன்வைத்தார்கள்.


சமய மார்க்கங்கள் சொன்னதை அரசியல் இயக்கமாக வழிநடத்தி, வெற்றிகரமாக அதனை செயல்படுத்தி வரக்கூடிய ஆட்சி தான் உங்கள் ஆட்சி, இந்த திராவிட மாடல் ஆட்சி. ஒரு துளி கண்ணீர் ஏழையிடமிருந்து வெளிப்பட்டாலும், அதனை துடைக்கவேண்டிய கைகளாக திராவிட மாடல் அரசின் கைகள் இருக்க வேண்டும் அதுதான் என்னுடைய நோக்கம்.


சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் ஆதிக்கத்தை நிலைநாட்டி, ஏழை எளிய மக்களை ஏமாற்றிட யார் நினைத்தாலும் அதனை அனுமதிக்காமல், எளிய மக்களின் உரிமைகளைக் காத்திடும் இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நலிந்தோர் வாழ்வு நிமிர்ந்திட, அவர்கள் மகிழும்போது, கடவுளின் புன்னகையை நம்மால்  கண்டுணர  முடியும்.  அந்தப் புன்னகை எல்லாத் தரப்பிலும் வெளிப்பட வேண்டும் என்ற இலக்குடன்தான் திராவிட மாடல் அரசு பயணித்துக் கொண்டிருக்கிறது. 


ஒருநாள் மகிழ்ச்சி என்பதுபோல, ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சி அமையவேண்டும். அதற்கு தொலைநோக்குத் திட்டங்கள் அமல்படுத்தக்கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.


கல்வித் துறையில் ஏற்பட்டிருக்கக்கூடிய புரட்சியைப்பற்றி குறிப்பிட்டுச் சொன்னார்கள். கிறிஸ்துவ நிறுவனங்கள் செய்துள்ள பங்களிப்பை நிச்சயமாக கல்வித்துறையைப் பொறுத்தவரையில் எவராலும் மறக்க முடியாது. இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக, இனிய தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கின்ற நானும் கிறிஸ்துவ நிறுவனத்தினரின் பள்ளியில்தான் படித்தேன். அதை நினைத்து இப்போதும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.


மொழியால் நாம் எல்லோரும் தமிழர்கள்


திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த முன்னோடி மொழியான தமிழ் மொழி தனித்தியங்கும் தன்மை கொண்ட செம்மொழி என்பதற்கு ஏராளமான சான்றுகள் வழங்கியும், தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் பங்காற்றிய வீரமாமுனிவர், எல்லிஸ், கால்டுவெல், போன்றவர்களின் பங்களிப்பும் இந்த நேரத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களைத் தொடர்ந்து தமிழுக்குச் செம்மொழித் தகுதியை வலியுறுத்தியவர் யார் என்று கேட்டால், பரிதிமாற் கலைஞர். அதனை நிறைவேற்றிக் காட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.


மதத்தால் வெவ்வேறானவராக இருந்தாலும், மொழியால் நாம் எல்லோரும் தமிழர்கள். அந்த உணர்வுடன், மதநல்லிணக்கத்தை முன்வைத்து, ஒற்றுமையுடன் பயணிப்போம். கிறிஸ்துமஸ் திருநாள் சிறப்பாக அமையட்டும்.  அடுத்து வரக்கூடிய ஆங்கிலப் புத்தாண்டும் ஒளிமயமாகத் திகழட்டும் என உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்” என பேசினார்