Just In





லிங்குசாமியின் கொரோனா ஆசிரமம்; நேரில் வாழ்த்திய உதயநிதி
கொரோனா நோயாளிகளுக்காக இயக்குனர் லிங்குசாமி ஆசிரமம் ஒன்றை துவங்கியுள்ளார். அந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

பிரபல இயக்குநர் லிங்குசாமி சென்னை மனப்பாக்கத்தில் கொரோனா நோயாளிகளுக்கென்றே தனியாக ஆசிரமம் ஒன்றை நேற்று திறந்துள்ளார். இந்த ஆசிரமம் திறப்பு நிகழ்ச்சிக்கு நேரில் வந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் பிரபல நடிகரும் எம்.எல்.ஏவும் ஆனா உதயநிதி ஸ்டாலின் மற்றும் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ். அமைச்சர் டி.என். அன்பரசனும் இந்த நிகழ்வில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் அதிகம் உள்ள இந்த காலத்தில் இயக்குநர் லிங்குசாமியின் இந்த முயற்சி பல தரப்பில் இருந்து பாராட்டுகளை பெற்றுள்ளது.

கும்பகோணத்தை அடுத்துள்ள திருச்சேறை என்ற ஊரை சேர்ந்தவர் தான் இயக்குநர் லிங்குசாமி. சினிமா மீது கொண்ட காதலால் ஆரம்பநிலையில் வெங்கடேஷ், விக்ரமன் போன்ற இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார் லிங்குசாமி. அதன் பிறகு மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் வெளியான ஆனந்தம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்கினர். முதல் படத்திலேயே பல முன்னணி நட்சத்திரங்களை இயக்கி வெற்றி பெற்றார்.
மாதவனின் ரன், தல அஜித் நடிப்பில் ஜி, விக்ரமின் பீமா சூர்யாவின் அஞ்சான் போன்ற பல தரமான படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்த லிங்குசாமி இறுதியாக விஷாலின் சண்டக்கோழி 2 படத்தை எழுதி இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாக உள்ள படத்தை இயக்கி வருகின்றார். இது அவருடைய முதல் தெலுங்கு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனவை பொறுத்தவரை இந்தியா அளவில் இதுவரை 2.46 கோடி பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த தொற்றால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டது.
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன.