சென்னை வடபழனியை சேர்ந்த ஜி.தேவா என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ;
சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலை, நுங்கம்பாக்கம் , வடபழனி ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலை. இந்த பகுதியில் டிரஸ்ட்புரம் புலியூர் பிரதான சாலையில் , எஸ்.எஸ்., ஹைதராபாத் பிரியாணி உணவகம் உள்ளது. பார்க்கிங் வசதியையும் , உணவகத்தினர் பயன்படுத்துகின்றனர்.
போக்குவரத்து நெரிசல்
உணவகம் வரும் வாடிக்கையாளர்கள் வாகனத்தை நிறுத்த இடவசதியின்றி , ஆங்காங்கேயும் அருகில் உள்ள தெருக்களிலும் நிறுத்துகின்றனர். இதனால் ஆற்காடு மற்றும் புலியூர் பிரதான சாலையை , பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில், போக்குவரத்து நெரிசல் உள்ளது.
உரிய சான்றிதழ் பெறவில்லை
பார்க்கிங் பகுதியில் நடத்தும் உணவகத்துக்கு உரிய தீ பாதுகாப்பு சான்றிதழ் பெறவில்லை. சட்ட விதிகளுக்கு மாறாக கீழ் தளத்தில் உணவகம் நடத்துகின்றனர். புகார் அளித்தும் மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்டோர் நடவடிக்கை எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
8 வாரத்தில் முடிவு
இந்த மனு , நீதிபதி என். மாலா முன் விசாரணைக்கு வந்தது. மாநகராட்சி தரப்பில் மனுதாரர் அளித்த புகார் மனு , சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி மனுவை , மாநகராட்சி 9 - வது மண்டல செயற்பொறியாளர் பரிசீலிக்க வேண்டும். உணவகமும் , மனுதாரரும் தங்கள் தரப்பு விளக்கம் அளிக்க போதிய வாய்ப்பளித்து , விசாரணை நடத்தி , எட்டு வாரத்தில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.