சென்னையில் உள்ள லிட்டில் பிளவர் கான்வென்ட் பள்ளியில் "ஆயிரம் ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை" என்ற அமைப்பின் நீர் சமநிலை முன்மாதிரி திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னை முழுவதும், இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. 


நீர் பாதுகாப்பில் ஆர்வம் கொண்ட பல்துறை குழுவாக "ஆயிரம் ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை" அமைப்பு உள்ளது. நீர் சமநிலைப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை காது கேளாதோர் மற்றும் பார்வை திறனற்றவர்களுக்கான லிட்டில் பிளவர் கான்வென்ட் பள்ளியில் மாதிரி திட்டத்தை இந்த அமைப்பு தொடங்கி உள்ளது.


இத்திட்டத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். நெதர்லாந்து நாட்டிற்கான சர்வதேச நீர் விவகாரங்களுக்கான முதல் சிறப்பு தூதர் ஹெங்க் ஓவிங்க், நெதர்லாந்து துணை தூதர் எவூட்டி விட், ஜெர்மனி துணை தூதர் மைக்கேல் குச்லர், "கேர் எர்த் டிரஸ்ட்" அமைப்பின் சூழலியாளர் மற்றும் நிர்வாக அறங்காவலரான டாக்டர் ஜெயஸ்ரீ வெங்கடேசன், ஊஸ் கட்டிட வடிவமைப்பு மற்றும் நகர வடிவமைப்புக்கான இயக்குநரும் மற்றும் “ஆயிரம் ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை" அமைப்பின் குழு தலைவருமான ஏவா ஃபென்னஸ் மற்றும் கங்கை நதி தூய்மைப்படுத்தும் தேசிய திட்ட பணிக்கான தொழில்நுட்ப செயல் இயக்குநர் டி.பி.மாதுரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இத்திட்டம் நெதர்லாந்து நாட்டிற்கான சர்வதேச நீர் விவகாரங்களுக்கான முதல் சிறப்பு தூதர் ஹெங்க் ஓவிங்கின் முன் முயற்சியாகும். இத்திட்டத்திற்கு நெதர்லாந்து அரசு நிதி அளிக்கிறது. இத்திட்டத்தில் சென்னை நகரம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உயர்மட்ட குழுவின் உதவியுடன் ஐக்கிய நாடுகள் வாழ்விடங்கள் மற்றும் பின்னடைவில் இருந்து மீட்பு திறன் அமைப்பு ஒருங்கிணைந்து செயற்படுகிறது.


சென்னையில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த முன்னோடி திட்டமானது சமூக மதிப்புக்களுடன் கூடிய வழிநடத்தலும், இயற்கை அடிப்படையிலான தீர்வு வடிவமைப்புக்கும், உயர்தரத்திற்கும் மற்றும் பிரதிபலிப்புக்கும் வழிவகுக்கும். நகரத்தில் தொடங்கி மற்றும் கங்கை நதி படுகையில் இருந்து உலகம் முழுவதும் இத்திட்டம் பரவும். ஐக்கிய நாடுகள் சபையின் நீர் செயல்படுத்துதல் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


மழை வெள்ளக் கால பாதிப்பு, பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர், கோடை காலத்தில் நிலவும் வறட்சி தன்மை ஆகியவற்றுக்கு இந்த திட்டம் தீர்வு காணும். வேகமான நகரமயமாக்கலில் சென்னை நகரமும் இதுபோன்றதொரு பிரச்னையை மழை வெள்ளம் மற்றும் வறட்சி காலங்களில் சந்திக்கிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுகிறது.


இத்திட்டம் சுற்றுச்சூழல்-அமைப்பு அடிப்படையில் சீரமைக்கப்பட்ட தொழில்நுட்பங்களை (அல்லது இயற்கை முறையிலான தீர்வுகளை) பயன்படுத்தி நகரம் நீர் பாதுகாப்பானதாக மாறுவதற்கான ஒரு மாதிரியை உறுதி செய்கிறது. மேலும் மழை நீரை சேகரித்து கழிவு நீரை சுத்திகரிக்கின்றது. வடிகட்டுதல் முறையில் தோட்டங்கள் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வழிவகை செய்கிறது.