செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்துள்ள சூனாம்பேடு ஊராட்சியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 60 வருடங்கள் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று இருந்தது. இந்நிலையில் இங்கு புதிய நிழற்குடை அமைவதையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன் அதிகாரிகள் இயந்திரங்கள் மூலம் ஆலமரத்தை அகற்றினர். ஆனால், அப்பகுதி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஊரக வளர்ச்சித் துறை உதவியுடன், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில், கிளைகள் மட்டும் அகற்றப்படும் என, ஊராட்சி மன்றம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

 



 

ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி, 8 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய நிழற்குடை கட்டும் பணிக்காக அடிக்கல் நாட்டப்பட்டது. அன்று இரவே, ஜேசிபி இயந்திரத்தின் மூலம், ஆலமரம் அடியோடு அகற்றப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து சமூக வலைதளத்தில் கண்டனங்களை எழுப்பியிருந்தார். மேலும், பாட்டாளி மக்கள் கட்சியின் துணை அமைப்பான பசுமைத்தாயகம் சார்பில் ஒப்பாரி போராட்டமும் நடைபெற்றது .



 

பின், அப்பகுதி மக்கள், அகற்றப்பட்ட ஆலமரத்தை, அதே இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஆனால், புதிய நிழற்குடை கட்ட ஆலமரம் இடையூறாக இருக்கும் என்பதால், சூனாம்பேடு அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், மார்ச் 9ம் தேதி மறு நடவு செய்யப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், வெப்ப சலனம் காரணமாக பெய்த மழையால், 3 மாதங்களுக்குப் பின், ஆலமரம் மீண்டும் துளிர் விட துவங்கியுள்ளது. இதைப் பார்த்த கிராம மக்கள் தற்பொழுது நிம்மதி அடைந்துள்ளனர். தொடர்ந்து இந்த மரத்தை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.