சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியானது வருகின்ற 29ஆம் தேதி துவங்கி , ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை வெகுவிமர்சையாக நடைபெற உள்ளது.இதனால் வெளிநாட்டு வீரர், வீராங்கனைகள் விமானம் வழியாக சென்னை விமான நிலையத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர். இதற்கான முன் ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்ததை ஒட்டி, தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்ய நாதன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். இறுதி கட்டமாக நடைபெறும் ஒரு சில பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார். 



 

இதனை அடுத்து செய்தியாளரை சந்தித்த  அமைச்சர் கூறுகையில , செஸ் போட்டிக்காக  அரங்குகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. இதுவரை சுமார் 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளனர். இன்று ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வீரர்களுக்காக அனைத்து விதமான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு வீரர்களுக்கு தேவையான சிம்கார்டுகளை போட்டி நடைபெறும் இடத்திலே, முகாம் அமைக்கப்பட்டு சிம்கார்டுகள் தேவைப்படுவதற்கு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .

 



இதற்காக சுமார் 2000 சிம் கார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அரங்கம் முழுவதும் அதிவேக 5ஜி இன்டர்நெட் சேவையும் கொடுக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.இதே போல நாளை மாலை ஒலிம்பியாட் சுடரானது இந்தியா முழுவதும் உள்ள 75 முக்கிய நகரங்களுக்கு சென்று விட்டு, மாமல்லபுரம் வரவுள்ளது. ஒலிம்பியாட் சுடருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியல் :


 

செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்தது. மொத்தம் 25 வீரர்கள் பங்கேற்கும் நிலையில் ஏற்கனவே 2 அணி வீரர்கள் பட்டியல் ஏற்கனவே, வெளியிடப்பட்டிருந்தது. இந்த 2 பட்டியலிலும் ஒரு பெண் உட்பட 5 தமிழக வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.

 

இந்நிலையில் இந்தியா சார்பில் பங்கேற்கும் 3-வது அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், சேதுராமன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதன்மூலம் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் தமிழக வீரர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. நடப்பாண்டு செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஆண்கள் பிரிவில் 188 அணிகளும் பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.