சென்னை அடுத்த பாடி அவ்வை தகரை சேர்ந்தவர் 35 வயதான செல்வம். இவர் ஒரு எம்இ முதுகலை பட்டதாரி. தனியார் நிறுவன ஊழியரான இவருக்கும், தாம்பரம் பெரியார் நகரை சேர்ந்த எம்இ, எம்பிஏ படித்த 31 வயதான கீர்த்தனா என்பவருக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதற்குள் இருதரப்பும் கல்யாணவேலைகளில் தீவிரமாக மூழ்கியது.


பத்திரிகை அடிப்பது, பட்டுப்புடவை, முகூர்த்த புடவை எடுப்பது போட்டோ வீடியோவுக்கும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி காலை வண்ணாரப் பேட்டை எம்.சி. ரோட்டில் உள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் நடக்க இருந்த திருமணத்துக்கு இரு குடும்பத்தை சேர்ந்த பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் குவிந்து இருந்தனர். மணமகன் செல்வம் திருமண உடையில் மணப்பெண்ணுக்கு தாலி கட்ட தயாராக இருந்தார். அதேபோல மணமகளும் ஆடை அலங்காரத்துடன் தயாராக இருந்துள்ளார். 


இந்த நேரத்தில் தான் திடீரென மணமேடையில் இருந்த கீர்த்தனா மணமேடையில் மயங்கி சாய்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரின் பெற்றோர் மற்றும் மணமகன் தரப்பினர் உடனடியாக வண்ணாரப்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.


அவரை பரிசோதித்த மருத் துவர்கள் ரத்த அழுத்தம், பல்ஸ் அனைத்தும் சரியாக இருக்கிறது என்று சொல்லி முடிக்கும் நேரத்தில், மணமகள் கீர்த்தனா திடீரென எழுத்து உட்கார்ந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதன்பிறகு, இதைபார்த்த பெற்றோர். மணமகன் சந்தோஷம் அடைந்தனர். ஆனால், அந்த சந்தோஷம் சில நொடிகள் கூட நீடிக்கவில்லை. 


காரணம், மணமகள் கீர்த்தனா, தன் பெற்றோரிடம் எனக்கு இந்த திருமணத்தில் இஷ்டம் இல்லை என்றும், நான் வேறு ஒருவரை காதலித்து வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அவரை தான் திருமணம் செய்வேன். இந்த திருமணத்தை நிறுத்த நான் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. எனவே, இந்த திருமணத்தை நிறுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை.


அதனால்தான் மயங்கியதாக நடித்தேன் என்று கூறினார். இதனால் தலையில் இடி இறங்கியது போல அவரது பெற் றோர் அப்படியே நின்றனர். இதை முன்பே சொல்லியி ருக்காலாமே என்று கேட்டபோது, நான் சொன்னால் நீங்கள் கேட்கும் மூடில் இல்லை என்று அசால்டாக பதில் அளித்துள்ளார். இந்த காட்சிகளைபார்த்துகொண்டிருந்த மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாரிடம் என் மகனை மணமேடை வரை அழைத்து வந்து அசிங்கப்படுத்திவீட்டீர்கள் என்று கூறி வண்ணாரப் பேட்டை அனைத்து மகளிர் போலீசில் மணமகன் செல்வம் புகார் அளித்தார்.


அதில் தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி, பட்டுப்புடவை, தங்க நகைகள், திருமணத்துக்கு ஆன செலவுகளை தர வேண்டும். அந்த பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். இதையடுத்து இரு தரப்பினரையும் அழைத்த காவல்துறையினர் பொருட்களை வாங்கி கொடுத்து அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.  திருணத்தை நிறுத்த மணப்பெண் நடத்திய நாடகம் பரபரப்பை ஏற்படுத்தியது.