சென்னையில் பணிபுரிந்து வரும் பெண் அரசு அதிகாரி ஒருவரின் மகள், தற்போது அமெரிக்காவில் படித்து வருகிறார். அவருக்கு அந்த பெண் அரசு அதிகாரி மாப்பிள்ளை பார்த்து வருகிறார். இந்த நிலையில், திடீரென்று பெண் அதிகாரியின் மகளின் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், “ உனது ஆபாச படங்கள் என்னிடம் உள்ளது. அவற்றை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க ரூபாய் 1 கோடி பணம் தர வேண்டும்” என்று இருந்தது. இதனால், அந்த பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.


உடனே அந்த பெண் சென்னையில் உள்ள தனது தாய்க்கு தகவல் தெரிவித்துள்ளார். மகளுக்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இவ்வாறு நடந்துள்ளதே என்று பதறிய தாய், உடனடியாக டி.பி. சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.




இதையடுத்து, உதவிகமிஷனர் ரமேஷ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் நடத்திய விசாரணையில், அமெரிக்காவில் வசிக்கும பெண்ணுக்கு குறுஞ்செய்தி விடுத்த நபர் ரமேஷ் என்றும், அவர் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிகிறார் என்பதையும் கண்டுபிடித்தனர். இந்த தகவலை அரசு பெண் அதிகாரியிடம் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்ட அந்த பெண் அதிகாரி அதிர்ச்சியடைந்தார். ஏனெனில், அரசு பெண் அதிகாரியின் நண்பர்தான் ரமேஷ் ஆவர்.


ரமேஷ் சென்னை போரூர் லட்சுமிநகரில் வசித்து வருகிறார். அவரது வயது 51. மென்பொறியாளராக இவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் அமெரிக்காவில் பணியாற்றியவர். சென்னையில் வசித்து வரும் பெண் அரசு அதிகாரி ஒருவர் இவருடைய நண்பர் ஆவார். அவருடைய மகள் தற்போது அமெரிக்காவில் படித்து வருகிறார். அந்த பெண் அமெரிக்காவில் இருந்தபோது திடீரென்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது, ரமேஷ்தான் உடனிருந்து அந்த பெண்ணை கவனித்து வந்துள்ளார். தற்போது, ரமேஷ் சென்னை திரும்பிவிட்டார்.




தன்னுடைய நெருங்கிய நண்பராகவும், குடும்ப நண்பராகவும் பழகி வந்த ரமேஷ் இந்த துரோகச்செயலில் ஈடுபட்டதை அறிந்த அந்த பெண் அரசு அதிகாரி மிகவும் மனம் உடைந்துவிட்டார். இதையடுத்து, வேறு ஒரு பெயரில் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த ரமேஷை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில்,


“ அந்த பெண் அரசு அதிகாரிக்கு வீட்டை பெரிதாக கட்டுவதற்காக ரூபாய் 50 லட்சம் வரை கடனாக கொடுத்தேன். அந்த பணத்தை திருப்பித்தராமல் இழுத்தடித்து வந்தார். அவரது மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்யவும் ஏற்பாடு செய்துவந்தார். திருமணம் நடந்தால் நமக்கு பணம் கிடைக்காது. எனவே, திருமணத்தை நடத்தவிடாமல் தடுப்பதற்கு இந்த மிரட்டல் நாடகத்தை நடத்தினேன்.


பெண் அதிகாரியின் மகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது, நான்தான் உடனிருந்து கவனித்தேன். அப்போது, அவர் செல்போனில் வைத்திருந்த ஆபாச படங்களை எனது செல்போனில் எடுத்துவைத்துக்கொண்டேன். அந்த படங்களை வைத்துதான் மிரட்டல் செய்தி அனுப்பினேன்.” இவ்வாறு அவர் கூறினார். பின்னர், அவரை நீதிமன்ற காவலில்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.