எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை


நேற்று காலை தொடங்கி காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தூரல் மழையானது பெய்துவந்த நிலையில் நேற்று நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. ஏற்கனவே சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது தொடர்ந்து, சென்னை அருகே உள்ள மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.


சட்டென்று மாறிய வானிலை


தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் கடந்த இரண்டு தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிபேட், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறுச்சி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


நேற்று முதல் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. மே மாதம் முடிந்து ஜூன் மாதத்தில் வெயில் கொளுத்தி வந்தது. பல பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட 2 – 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருந்தது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் கடந்து பதிவானது. வெயிலினால் மக்கள் அவதி பட்டு வந்த நிலையில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. இதனால் உஷ்ணம் தணிந்து பூமி குளிர்ந்து காணப்படுகிறது.


இன்று  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.


சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன் தினம் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று காலை முதல் லேசான மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை ஒரு மினி ஊட்டியாக மாறியுள்ளதாக மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. வெயில் வாட்டி வதைத்த நிலையில் மீனம்பாக்கம், நங்கநல்லூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, சைதாப்பேட்டை, அடையாறு, பட்டினப்பாக்கம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, புரசைவாக்கம், வேப்பேரி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடலில் இருந்து மேகக்கூட்டங்கள் வருவதை ஒட்டி கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இந்த மழையானது அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு தொடரும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.