சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகர், இளங்கோ நகரில் 255 வீடுகள் உள்ளன. இவற்றில் 3000 பேர் வசித்து வருகின்றனர். இந்த வீடுகள் நீர் நிலை கால்வாய் பகுதியில் இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் உள்ள குடியிருப்புகளை அரசு அகற்றி வருகிறது. அரசு நிலத்தில் குடியிருப்புகள் இருப்பதாகவும் அதனால் அகற்றப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.


இந்நிலையில் இந்த ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. அதில், அந்த இடத்தில் வசிக்கும் மக்கள் சார்பில் சில கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தது. அதன்படி அங்கு ஆக்கிரமிப்பு அகற்றத்தை எதிர்த்து ஒருவர் தற்கொலை செய்துள்ளார். மேலும் அப்பகுதியில் வசிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்விற்கு தயாராகி வருகின்றனர். ஆகவே அங்கு தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இடிக்கும் பணிகளை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 


இதற்கு நீதிபதிகள், “2011ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு பின்பு இத்தனை ஆண்டுகள் நீங்கள் இங்கு வசித்து வந்துள்ளீகர்கள். உங்களுக்கு போதிய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக நாங்கள் எந்தவித தடையும் விதிக்கப் போவதில்லை. நாங்கள் தடை விதித்து ஏற்கெனவே அளிக்கப்பட்டிருந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை நீர்த்து போகவிடமாட்டோம்” எனத் தெரிவித்தனர்.


முன்னதாக வீடுகளை அப்புறப்படுத்தக் கூடாதென கண்டனம் தெரிவித்து 60 வயதுமிக்க கண்ணையா என்ற நபர் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிப்பில் ஈடுபட்டார். பலத்த காயம் அடைந்த அவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆத்திரமடைந்த அப்பகுதிவாசிகள் அரசு வாகனங்கள், வீட்டை அப்புறப்படுத்திய புல்டோசர்களை அடித்து நொறுக்கினர். இதன்காரணமாக அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டிருந்தது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண