சென்னையில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், புறநகர் பகுதிகள் தற்போது வளர்ச்சியடைந்து வருகின்றன. அந்த வகையில், ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியில், சமீபத்தில் டைடல் பார்க் திறக்கப்பட்ட நிலையில், தற்போது கோயம்பேடு - பட்டாபிராம் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

Continues below advertisement

சென்னை மெட்ரோ திட்டம்:

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. அதை குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் சென்னை மெட்ரோ ரயில் திட்டம். தற்போது சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையானது இயங்கி வருகிறது. விம்கோ நகர்- சென்னை விமான நிலையம் வரையிலும், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை இந்த சேவையானது வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, சென்னை இரண்டாம் கட்ட பணிகாளனது தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

Continues below advertisement

2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டம் பணிகள் ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் - சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் மெட்ரோ வழித்தடம் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

கோயம்பேடு-பட்டாபிராம் மெட்ரோ: 

சென்னையில் வேகமாக வளர்ந்து வரும் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், முகப்பேர், ஆவடி, பட்டாபிராம் பகுதிகளுக்கு மெட்ரோ ரயில் சேவை வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையின் அடிப்படையில், கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் பணிக்கான திட்ட அறிக்கை தயார் பணிகள் தொடங்கப்பட்டது. 

திட்ட அறிக்கை சமர்பிப்பு: 

இந்த பணிக்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் கோயம்பேடு முதல் பட்டாபிராம் (வெளிவட்டச் சாலை) வரை மெட்ரோ இரயில் போக்குவரத்து அமைப்பை நீட்டிப்பதன் பரிந்துரைக்கான விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report), தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளரிடம், கடந்த பிப்ரவரி மாதம் மெட்ரோ ரயில் நிர்வாகத்தால் சமர்ப்பிக்கப்பட்டது.

அதில் முன்மொழியப்பட்ட மெட்ரோ வழித்தடம், தற்போதுள்ள கோயம்பேடு மெட்ரோ நிலையத்தில் தொடங்கி, பாடி புதுநகர், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி வழியாகச் சென்று பட்டாபிராம் வெளிவட்டச் சாலையில் முடிவடைகிறது.

இது அம்பத்தூர் எஸ்டேட் மற்றும் அம்பத்தூர் OT, ஆவடி இரயில் நிலையம், பேருந்து முனையம் மற்றும் வெளிவட்டச் சாலை (ORR) போன்ற போக்குவரத்து மையங்களுக்கு தடையற்ற இணைப்பை வழங்கும். திட்ட செலவு மற்றும் செயல்படுத்தும் நேரத்தை மேம்படுத்துவதற்காக இது மூன்று இடங்களில் (அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து பணிமனை சந்திப்பு, டன்லப் அருகே, ஆவடி பேருந்து நிலையத்திற்கு முன்னால்) நெடுஞ்சாலை மேம்பாலத்துடன் ஒருங்கிணைக்கப்படவுள்ளது.

விரிவான திட்ட அறிக்கையின் (DPR) முக்கிய அம்சங்கள்:

  • வழித்தடத்தின் மொத்த நீளம்: 21.76 கி.மீ
  • உயர்த்தப்பட்ட ரயில் நிலையங்களின் எண்ணிக்கை: 19
  • மதிப்பிடப்பட்ட நிறைவு செலவு: ரூ. 9,928 கோடி.
  • ரூ.464 கோடியில் நெடுஞ்சாலையில் 3 புதிய மேம்பாலங்கள் கட்ட முடிவு.

இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், அம்பத்தூர் தொழிற்பேட்டையை சுற்று ஏராளமான தொழிற்சாலைகள் மட்டும் ஐடி நிறுவனங்கள் உள்ளன, இதற்காக தினமும் ஏரளாமான மக்கள் இங்கு வேலை நிமித்தமாக இங்கு வந்து செல்வதாலும் பல ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்கள் இருப்பதால் சென்னையின் முக்கிய பொருளாதார மையமாக அம்பத்தூர் பகுதி விளங்குகிறது. 

தற்போது தென் சென்னை பகுதிகளான தாம்பரம், சோழிங்கநல்லூர் பகுதிகளில் இருந்து அம்பத்தூர், ஆவடிக்கு வரவேண்டுமென்றால் மக்கள் படாதபாடு படவேண்டிய நிலை உள்ளது. இந்த மெட்ரோ திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் சென்னையின் அனைத்து பகுதிகளுக்கும் மிக சுலபமாக சென்று வர முடியும்.

திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல்

கோயம்பேடு-பட்டாபிராம் விரையில் 9,928 கோடி ரூபாயில் அமையவுள்ள மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு மற்றும் வெளி நிறுவனங்களின் நிதியுதவியுடன் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.