குழந்தை திருமணம் தொடர்பான புகாரில் சிதம்பரம் தீட்சிதர்கள் 52  பேரை கைது செய்யக்கூடாது என்ற உத்தரவை நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணங்கள் செய்து வைத்ததாக வந்த புகாரின் அடிப்படையில், சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் 2 வழக்குகளும், சிதம்பரம் நகர காவல் நிலையத்தினர்  ஒரு வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

 

இந்த வழக்குகளில் திருமணம் செய்து வைத்த தீட்சிதர்களை போலீசார் கைது செய்ததை கண்டித்து சாலை மறியலில்  ஈடுபட்ட பிற தீட்சிதர்கள் மீது சிதம்பரம் நகர காவல்துறையினர் ஒரு வழக்கும் பதிவு செய்துள்ளனர். 

 

இந்த 4 வழக்குகளிலும் தொடர்புடைய கண்ணன் உள்ளிட்ட 52 தீட்சிதர்கள் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

 

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நவம்பர் 1ம் தேதி வரை இவர்களை கைது செய்யக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டதுடன், பதிலளிக்கவும் உத்தரவிட்டுருந்தது.

 

இந்நிலையில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா ஆஜராகி, கைது செய்ய விதிக்கப்பட்ட தடை இன்றுடன் முடிவடைவதால், அதை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

 

அப்போது காவல்துறை தரப்பில் பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெற 2 வாரம் அவகாசம் வேண்டும் என தெரிவிக்கபட்டது.

 

இதையடுத்து மனுதாரர்கள் 52 பேரையும் கைது செய்யக்கூடாது என்ற இடைக்கால உத்தரவை, நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.



 


மற்றொரு வழக்கு






 

திருப்பூரில் இயங்கி வரும் அம்மன் ஜுவல்லர்ஸ் நகை கடை உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் மங்கலம் சாலையில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்துவதால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

போராட்டங்களின் போது தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால், அங்குள்ள வணிக  நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனையில் இருப்பவர்கள் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. 

 

எனவே மக்கள் நடமாட்டம் நிறைந்த மங்கலம் சாலைக்கு பதிலாக, நொய்யல் ஆற்றங்கரையோர காலியாக உள்ள இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி வழங்குமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை மனு அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். 

 

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்த போது ஆஜரான அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார், போரட்டம் நடத்த மனுதாரர் நீதிமன்றத்திடமே அனுமதி கேட்பது போல உள்ளதாகவும், இதற்கு அனுமதியளித்தால் இது தவறான முன்னுதாரணமாகிவிடும் என கூறினார். 

 

மேலும், நொய்யால் ஆற்றங்கரையில் போராட்டம் நடத்த அனுமதி அளித்தால் இயற்கை பாதிப்படைய வாய்ப்பிருப்பதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.