உலக அளவில் மிக முக்கிய கார் தயாரிக்கும் நிறுவனமாக ஃபோர்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னையை அடுத்த மறைமலை நகரில் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வந்த கார் உற்பத்தி செய்யும் சென்னை ஃபோர்டு தொழிற்சாலையானது கடந்த 10 ஆண்டுகளாக இழப்பை சந்தித்து வருவதாக கூறி தொழிற்சாலையை கடந்த வருடம் ஜூன் மாதம் மூடப் போவதாக நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் கடந்த ஜூலை 31ஆம் தேதி உற்பத்தி நிறுத்தப்பட்டது .

 

கோடிக்கணக்கில் இழப்பு

 

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகளாக வாகனங்களை உற்பத்தி செய்து வந்தது. இந்த ஆலைகளில் வருடத்திற்கு நான்கு லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில் தற்போது 80 ஆயிரம் கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. இதனால் 14,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதால் கடந்த மாதம் ஜூலை 31ஆம் தேதி முழுமையாக உற்பத்தியை நிறுத்தியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த நிறுவனத்தின் ஊழியர்கள், பல கட்ட போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.



 

215 நாள் ..

 

தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில் இழப்பீடு தொகை நிர்வாகம் சார்பில் கொடுக்கப்பட்டால், வருடத்திற்கு 215 நாட்கள் என கணக்கு செய்து கொடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், குறைந்தபட்சம் 185 நாட்கள் ஆவது கொடுத்தே தீர வேண்டும் என தொழிற்சங்கத்தினர் கூறிவந்தனர். ஆனால் நிர்வாகம் தரப்பில் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக சுமார் 68 முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

130 நாட்கள் மட்டுமே..

 

இறுதியாக கடந்த வாரம் சென்னை மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலை சார்பில், 130 நாட்கள் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. VSS SCHEME என்ற பெயரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் செப்டம்பர் 23ஆம் தேதிக்குள் இதற்கு, விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ஊழியர் ஒருவருக்கு 33 லட்ச ரூபாயிலிருந்து , அதிகபட்சமாக 85 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் என கூறப்படுகிறது. இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு வரை  பேச்சுவார்த்தையானது தொடர்ந்தது.



 

 

 

தொழிற்சங்கத்திடம்  தீர்வு

 

நேற்று சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் உமாபதி தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இது சமூக தீர்வு எட்டப்பட்டதாக தொழிற்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  முத்தரப்பு பேச்சுவார்த்தையில், ஒவ்வொரு பணி முடித்த ஆண்டுக்கும் சராசரியாக 140 நாட்கள் ஊதியம் அளிக்கப்படும் எனவும், மேற்கண்டவைக்கு கூடுதலாக ஒரு முறை மட்டும் சிறப்பு தொகையாக தலா 1.5 லட்சம் ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் தீர்வு தொகுதியாக வழங்க நிர்வாகம் சம்பந்தம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கூடுதலாக பத்து நாட்களுக்கான தீர்வு தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



 

 

தொழிற்சங்க தரப்பு விளக்கம்

 

இது தொடர்பாக தொழிற்சங்க பொருளாளர் படவேட்டன் கூறுகையில், முத்தரப்பு பேச்சு வார்த்தையின் முடிவில் சுமுக தீர்வு எட்டப்பட்டுள்ளது என தெரிவித்தார். நிர்வாகம் 140 நாட்கள் மட்டும் கூடுதலாக 1.5 லட்சம் ரூபாய் கொடுப்பதாக ஒப்புக்கொண்டனர்.

 



 

 

ஒரு தரப்பினர் எதிர்ப்பு

 

இதுகுறித்து தொழிற்சாலை ஊழியர்கள் சிலர் தெரிவிக்கையில், எங்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் என உறுதியாக இருக்கிறோம். தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற தீர்மான வாக்கெடுப்பில், சுமார் 400க்கும் மேற்பட்ட நபர்கள் வேலை வாய்ப்பு வேண்டும் என வாக்களித்துள்ளனர். எனவே எங்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்ய வேண்டும் எனக் கூறி வருகின்ற திங்கட்கிழமை சென்னையில் ஆர்ப்பாட்டமும் நடத்து உள்ளோம் என தெரிவித்தனர்.