ஆள்மாறாட்டம் செய்து ஆவணங்கள் மாற்றம்

Continues below advertisement


சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த தாராசந்த் என்பவர் தனது தாயார் ருக்குமணி என்பவருக்கு சொந்தமாக 1 கிரவுண்ட் மற்றும் 1,262 சதுரடி கொண்ட கட்டிடத்துடன் கூடிய இடம் உள்ளதாகவும், 2019ம் ஆண்டு ருக்குமணி இறந்து விட்ட நிலையில் சிலர் கூட்டாக சேர்ந்து தனது தாயார் ருக்குமணி போல ஒரு நபரை ஆள்மாறாட்டம் செய்தும், போலி ஆவணங்கள் மூலம் ஜெயராமன் மற்றும் அவரது மனைவி கலைச் செல்வி ஆகியோருக்கு கிரையம் செய்து கொடுத்து பின்னர் சொத்தை தனியார் வங்கியில் அடமானம் வைத்து ரூ.3.03 கோடி பணத்தை கடனாக பெற்று கடனை செலுத்தாததால் வங்கியிலிருந்து மேற்படி இடத்தில் கடன் நிலுவை நோட்டீஸ் ஒட்டியுள்ளதாகவும் , தனது தாயார் பெயரிலுள்ள இடத்தை ஆள்மாறாட்டம் செய்தும், போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து, வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தாராசந்த் , 13.02.2024 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு நிலமோசடி புலனாய்வு பிரிவில் ( LFIW), வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.


போலீஸ் விசாரணையில் கைது


நில மோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து சுமார் 10 நபர்கள் கூட்டாக சேர்ந்து மேற்படி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதன் பேரில், காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு, இவ்வழக்கில் தொடர்புடைய கலைச்செல்வி (வயது 60) என்பவரை 26.04.2024 அன்று கைது செய்தும், ஶ்ரீதர் (வயது 60 ) என்பவரை 01.04.2025 அன்றும் கைது செய்தனர். மேலும் பிரசாந்த் ( வயது 31 ) என்பவரை 07.04.2025 அன்று கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டது.


வங்கியில் ரூ. 5 கோடி கடன் 


இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களான சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் (எ) கிரன்ராஜ் ( வயது 47 ) மற்றும் மதுரை மாவட்டத்தை  சேர்ந்த குமார் (வயது 43 ) ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 1 லேப்டாப் மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் குமார் என்பவர் மத்திய குற்றப்பிரிவு மோசடி வழக்கில் ரமேஷ் உல்லா மற்றும் பாரதி உல்லா ஆகியோருக்கு சொந்தமாக Seashore town modern lay out, சோழிங்கநல்லூர் என்ற இடத்திலுள்ள சுமார் 9,000 சதுரடி இடத்தை குமார் மற்றும் இவரது கூட்டாளிகள் சேர்ந்து ஷியாஸ் புதுவிட்டில் என்ற வெளிநாடு வாழ் இந்தியருக்கும் , அவரது மனைவிக்கும் விற்பது போன்று போலியான விற்பனை பத்திரத்தை நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தது போல உருவாக்கி , அதனடிப்படையில் எழும்பூரிலுள்ள தனியார் வங்கியில் அடமானமாக வைத்து இருவர் பெயரிலும் மொத்தம் ரூ.5 கோடி கடன் தொகையாக பெற்றும் , மேற்படி கடன் தொகையை எதிரிகள் பிரித்து கொண்டு ஷியாஸ் புதுவிட்டில் என்ற மனுதாரரையும், வங்கியையும் ஏமாற்றியது தொடர்பாக ஷியாஸ் புதுவிட்டில் என்பவர் கொடுத்த புகார் மீது மத்திய குற்றப்பிரிவு, நிலமோசடி புலனாய்வு பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கிலும் குமார் ( வயது 43 ) என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் குமார் மீது ஏற்கனவே மத்திய குற்றப் பிரிவில் 10 குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.