தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக ஓரளவு மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், சென்னையில் வடிகால் நீர் பணிகள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறுவதற்காக, சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


இந்த நிலையில், நேற்று திடீரென பெய்த மழையால் சென்னையின் பல பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. இதனால், மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர். இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.




அதற்கு மேயர் பிரியா, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி 95 சதவீதம் நிறைவு பெற்றுவிட்டது. வரும் 10-ந் தேதிக்குள் இந்த பணிகள் முழுமையாக முடிவடையும் என பதிலளித்தார். மேலும், இந்த கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினர்.


அவற்றில் குறிப்பிடத்தக்கவை, “ முதல் அரையாண்டுக்கான உயர்த்தப்பட்ட சொத்து வரியினை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் ( இன்றுக்குள்) செலுத்தாத சொத்து உரிமையாளர்களுக்கு 2 சதவீதம் தனி வட்டி விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சொத்து வரி செலுத்த போதிய கால அவகாசம் வழங்கியபோதிலும், முதல் அரையாண்டிற்கான சொத்து வரியை செலுத்தாத உரிமையாளர்களுக்கு மட்டும் சிறப்பு நிகழ்வாக 2 சதவீத தனி வட்டி விதிப்பதில் இருந்து தளர்வு செய்து அனுமதிக்கப்படுகிறது.




சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கட்டிடங்கள் ட்ரோன் மூலம் ஆய்வு செய்யப்பட்டு 3 லட்சத்து 10 ஆயிரத்து 139 கட்டிடங்கள் மாறுபாடு உள்ள கட்டிடங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. அடையாறு காந்திநகர் கால்வாய் கரை சாலையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவிற்கு கலைஞர் கருணாநிதி பூங்கா என்று பெயர் சூட்ட வேண்டும். சாலைகளில் உயர்த்தப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூபாய் 1,550ல் இருந்து ரூபாய் 3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.”


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.