பணி நிரந்தரம் மற்றும் ஊதியம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாட்களாக போராடி வந்த தூய்மை பணியாளர்கள் நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். இந்த கைது தொடர்பாக சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்துள்ளது. ‘

தூய்மை பணியாளர்கள் போராட்டம்: 

சென்னை ரிப்பன் மாளிகைக்கு முன்பு, தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பணி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 1 முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று (ஆகஸ்ட் 13) இந்தப் போராட்டம் 13-வது நாளை எட்டியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

உயர்நீதிமன்றம் உத்தரவு:

ஆனால், போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. ‘போராட்டக்காரர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்; அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்திக் கொள்ளலாம்’ எனவும், உத்தரவை மீறினால் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து, அமைச்சர் கே.என். நேரு, மேயர் பிரியா ஆகியோர் மாலை நேரத்தில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், எந்த உடன்பாடும் எட்டப்படாததால், போராட்டம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

பின்னர், மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமார், “உடனடியாக போராட்டத்தை கலைக்க வேண்டும்; இல்லையெனில் வழக்கு தொடரப்படும்” என்று எச்சரித்தார். இதனால், ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு, பூந்தமல்லி நெடுஞ்சாலை ஒருவழி சாலையாக மாற்றப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டன.

நள்ளிரவில் கைது:

நள்ளிரவு 12 மணியளவில், சென்னை பெருநகர காவல்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கி, போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தது. கைது நடவடிக்கையின்போது காவல்துறையினரும், போராட்டக்காரர்களும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர், கைது செய்யப்பட்டவர்கள் 30 அரசு பேருந்துகளில் ஏற்றி, எழும்பூர் ஆர்.ஆர். மைதானம் மற்றும் பல்வேறு சமுதாய நல கூடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. கைது நடவடிக்கைக்கு பின், ரிப்பன் மாளிகை முன் அமைந்திருந்த போராட்ட கூடாரம் முழுமையாக அகற்றப்பட்டது.

சமூக வலைதளங்களில் கண்டனம்:

அறவழியில் போராடிய தூய்மை பணியாளர்களை கைது செய்யட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர். 

போராட்டம் பண்றவங்க நியாயமான கோரிக்கைய வச்சு, அமைதியா தான இருந்தாங்க ? இவங்கள ஏன் இப்போ ராத்திரியோட ராத்திரியா அவசர அவசரமா அப்புறப்படுத்தனும் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தூய்மை பணியாளர்களின் கைதுக்கு பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் தங்களது எதிர்ப்பை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.