சென்னை மாநகராட்சியின் மேயராக பிரியா பொறுப்பு வகிக்கிறார். இந்த நிலையில், மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் நேற்று மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங்பேடி ஆகியோரும் பங்கேற்றனர்.


இவர்களுடன் நிலைக்குழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். திருக்குறள் வாசிப்புடன் தொடங்கிய இந்த கூட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர். கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.


அந்த கேள்விகளின் விவரம் பின்வருமாறு:


கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகரன் (திமுக): கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சென்னையில் 348 நவீன கழிவறைகள்(இ-டாய்லெட்கள்) கட்டுவதற்கு 4 நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கி பணிகள் நடைபெற்றன. ஆனால் நிர்வாக சீர்கேடு, முறையான பராமரிப்பு இல்லாததால் கட்டப்பட்ட சில கழிவறைகளும் சீர்குலைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.


மேயர் பிரியா: தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ள நவீன கழிவறைகளை சீரமைக்க குறிப்பிட்ட அந்த நிறுவனங்களை மீண்டும் அழைத்து, அதனை சரிசெய்ய அறிவுறுத்தியதால் 37 இடங்களில் சீர் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி முழுவதும் கழிவறைகள் கட்ட தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 358 இடங்களில் புதிதாக நவீன கழிவறைகள் மற்றும் சிறுநீர் கழிப்பிடம் அமைக்கப்பட்டு வருகிறது. படிப்படியாக, மாநகராட்சி முழுவதும் கிடைக்கப்பெறும் இடங்களில் கழிவறை அமைக்கப்பட உள்ளது.


சேட்டு (அதிமுக): புழல் 24-வது வார்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் மட்டுமே நடக்கிறது. குறைவான ஊழியர்களே இருப்பதால் இதர நோய்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்படுவது கிடையாது. அதற்கு தீர்வு?


மேயர் பிரியா: உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ பணியாளர்கள் தேவைப்படும் பட்சத்தில் ஒப்பந்த அடிப்படையில் தேவையான ஊழியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.


ஜீவன் (மதிமுக): திருக்குறள், தீண்டாமை உறுதிமொழிக்கு பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து தொடங்கி மாமன்ற கூட்டம் தொடங்கப்பட்டால் அது தமிழுக்கான சிறப்பாக அமையுமே?

மேயர் பிரியா: அடுத்த மாமன்ற கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்படும். இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும்.


சிவராஜசேகரன் (காங்கிரஸ்): செல்லப்பிள்ளை கோவில் தெருவில் சிதிலமடைந்து இருக்கும் சமுதாய நலக்கூடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டிடம் கட்டப்படுமா?


மேயர் பிரியா: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


சரஸ்வதி (இந்திய கம்யூனிஸ்டு): எனது 123-வது வார்டில் பள்ளி அமைந்திருக்கும் நடைபாதைகளில் கடைகள் என்ற பெயரில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? எல்டாம்ஸ் சாலை, பெரியார் சாலை மீன்மார்க்கெட் வளாகத்தில் கழிவறை அமைக்கப்படுமா?

மேயர் பிரியா: ஆக்கிரமிப்புகள் இருக்கும் பட்சத்தில் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். எல்டாம்ஸ் சாலை, பெரியார் சாலையில் குறிப்பிடும் மீன்மார்க்கெட் வளாகங்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வருவதால், மாநகராட்சி பணிகள் மேற்கொள்ள தடையில்லா சான்று விரைவில் கோரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.


குமாரசாமி (வி.சி.க.): 73வது வார்டு குக்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படுமா?


மேயர் பிரியா: நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.


இவ்வாறு மாமன்ற உறுப்பினர்களின் பலரது கேள்விக்கு மேயர் பிரியா பதிலளித்தார்.