சென்னை விமான நிலையத்திற்கு செல்போன் மூலம், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த, பள்ளி மாணவர்கள் 2 பேரை, சென்னை விமான நிலைய போலீசார், பள்ளி மாணவர்களை கடுமையாக எச்சரித்து, மன்னிப்பு கடிதங்கள் எழுதி வாங்கிக்கொண்டு, நேற்று இரவு விடுவித்தனர். 


கழிவறையில் வெடிகுண்டுகள்


சென்னை விமான நிலையத்திற்கு, நேற்று பிற்பகல் ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், சென்னை விமான நிலையத்தில், கழிவறையில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருக்கிறது. அவைகள் மிகவும் சக்தி வாய்ந்தவைகள், இன்னும் சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் என்று கூறி விட்டு, இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. இதை அடுத்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் பரபரப்பு அடைந்து, விமான நிலைய வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் மோப்ப நாய்களுடன் விரைந்து வந்து, சென்னை விமான நிலையத்தில் கழிவறைகள் மற்றும் உள்பகுதிகளில் ஆய்வு செய்தனர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை. எனவே இது வெறும் புரளி என்று தெரிய வந்தது.


இந்த நிலையில் சென்னை விமான நிலைய போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து, இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்த செல்போன் எண்ணை கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த எண் சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் போலீஸ் நிலைய பகுதியில் இருந்து வந்துள்ளது தெரிந்தது. அதோடு பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்துள்ளதும் தெரிய வந்தது. 


இதை அடுத்து சென்னை விமான நிலைய போலீஸ் தனிப்படையினர், சேலையூர் பகுதிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி, குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவர் ஒருவர், சேலையூர் அருகே அகரம் தென் பகுதியை சேர்ந்த மற்றொரு பிளஸ்1 மாணவரையும் , அவர்களிடமிருந்து மிரட்டல் விடுக்க பயன்படுத்திய செல்போனையும், பறிமுதல் செய்தனர். அதன்பின்பு இரு மாணவர்களையும் சென்னை விமான நிலைய போலீசின் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.


மன்னிப்பு கடிதங்கள்


சென்னை விமான நிலைய போலீசார் நடத்திய விசாரணையில், மாணவர்கள் இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு, ஜாலியாக தெரியாமல் செய்து விட்டோம். எங்களை மன்னித்து விடுங்கள் என்று கெஞ்சினர். இதை அடுத்து போலீசார் மாணவர்களின் பெற்றோர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதன்பின்பு மாணவர்களை கடுமையாக எச்சரித்தனர். அதோடு அவர்களின் பெற்றோர்களுக்கும் அறிவுரை கூறினர். அதன் பின்பு மாணவர்கள் இருவரிடமும் மன்னிப்பு கடிதங்கள் எழுதி வாங்கிக்கொண்டு, இரு மாணவர்களையும் நேற்று இரவு அவர்களின் பெற்றோர்களுடன் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.