சென்னை விமான நிலைய பொது மேலாளர் (விமானங்கள் இயக்கம்) எஸ் எஸ் ராஜு, விமான நிலைய இயக்குனர் பொறுப்பை, தற்காலிகமாக கவனிக்கிறார். சென்னை விமான நிலையத்தில் இயக்குனராக டாக்டர் சரத்குமார் இருந்தார். இவர் ஏற்கனவே சென்னை ஒருங்கிணைந்த புதிய விமான நிலைய கட்டுமான துறையின் தலைமை அதிகாரியாக சென்னையில் பணியாற்றினார். அதன் பின்பு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை விமான நிலைய இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

 

ஒருங்கிணைந்த புதிய விமான முனையம்

 

இந்த நிலையில் இவருடைய சென்னை விமான நிலைய இயக்குனர் பதவி காலம் கடந்த ஜனவரி மாதமே நிறைவடைந்தது. இதை அடுத்து சரத்குமார், டெல்லியில் உள்ள தலைமையகத்திற்கு, அனைத்து விமான நிலையங்களின் விமானங்கள் இயக்கம் (ஆபரேஷன்) துறைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஆனால் சென்னையில் கட்டப்பட்டு வந்த ஒருங்கிணைந்த புதிய விமான முனையம், திறப்பு விழா வரையில், அவர் சென்னையிலேயே பணியில் இருக்க அனுமதி கேட்டார். அதன்படி சென்னை விமான நிலைய இயக்குனராக சரத்குமார் தொடர்ந்தார்.

 

இந்திய விமானங்கள் இயக்கம் ஆபரேஷன் பிரிவு

 

இதற்கு இடையே கடந்த மாதம் சென்னை விமான நிலைய புதிய முனையம், திறப்பு விழா நடந்து, புதிய முனையத்தில் விமான சேவைகள் தொடங்கியுள்ளன. இதை அடுத்து சென்னை விமான நிலைய இயக்குனராக இருந்த சரத்குமார், அந்தப் பொறுப்பில் இருந்து, விடுவிக்கப்பட்டு, டெல்லி தலைமையகத்தில் உள்ள, இந்திய விமானங்கள் இயக்கம் ஆபரேஷன் பிரிவு உறுப்பினர் பதவியை ஏற்கும் படி, இந்திய அப்பாயின்மென்ட் கமிட்டி, கடந்த 29 ஆம் தேதி உத்தரவிட்டது.

 

 

அதன்படி சென்னை விமான நிலைய இயக்குனராக இருந்த டாக்டர் சரத்குமார், தனது பொறுப்புகளை சென்னை விமான நிலைய பொது மேலாளர் (விமானங்கள் இயக்கம்) எஸ் எஸ் ராஜுவிடம் ஒப்படைத்துவிட்டு, டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். சென்னை விமான நிலையத்திற்கு புதிய இயக்குனர் நியமிக்கப்படும் வரை, சென்னை விமான நிலைய இயக்குனர் பொறுப்பை, பொது மேலாளர் எஸ் எஸ் ராஜு கவனிப்பார் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறப்படுகிறது.