புகைமூட்டம் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 50 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பல ஆயிரக்கணக்கான பயணிகள் அவதி. 4 விமானங்கள் ஹைதராபாத் திருப்பி அனுப்பப்பட்டன. அந்தமான் புறப்பட வேண்டிய ஒரு விமானம் ரத்து. மேலும் 21 வருகை விமானங்கள், 24 புறப்பாடு விமானங்கள், சில மணி நேரங்கள் தாமதம்.

 

 

 


Bhogi Pongal 2024 ( போகிப் பண்டிகை )


உலகம் முழுக்கவே அறுவடை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் அறுவடை திருவிழாவாக பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. வேளாண்மையே இந்நாட்டின் முதன்மையான தொழில் என்பதால் அறுவடை காலத்தையும், விவசாயத்திற்கு ஆதாரமாக இருக்கும் சூரியனை போற்றி நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாள், போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சுத்தம், சுகாதாரத்தை பேணும் விதமாக போகி கொண்டாடப்பட்டு வருகிறது. ‘புதியன புகுதல்’ என்று சொல்லப்படுவதை கேட்டிருப்போம். தை பிறந்தால் வழி பிறக்கும் என கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, தை மாதத்தின் முதல் நாளான நாளை கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக மார்கழி மாதத்தின் கடைசி நாளை போகிப் பண்டிகை என கொண்டாடுவது தமிழ் மக்களின் மரபு.



விமான சேவைகள் பெருமளவு பாதிப்பு

 

சென்னையில் போகிப் பண்டிகை புகைமூட்டம் பனிமூட்டம் இரண்டும் சேர்ந்ததால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பெருமளவு பாதிப்பு. சிங்கப்பூர் லண்டன் இலங்கை டெல்லி ஆகிய 4 விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல், ஹைதராபாத் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. அதோடு மஸ்கட், துபாய், குவைத், மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட 20 வருகை விமானங்கள், மேலும் துபாய், மஸ்கட், குவைத், சிங்கப்பூர், லண்டன், மும்பை, டெல்லி, அந்தமான், தூத்துக்குடி, மதுரை, திருவனந்தபுரம், புனே உள்ளிட்ட 24 புறப்பாடு விமானங்கள், புகைமூட்டம் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

 

விமான சேவை சீரடையும்

 

காலை 9 மணிக்கு மேல் விமான சேவை சீரடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இன்று காலை 9.25 மணிக்கு சென்னையில் இருந்து அந்தமான் செல்ல இருந்த ஸ்பைஜெட் விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இதுவரையில் சென்னை விமான நிலையத்தில் வருகை புறப்பாடு விமானங்கள் சுமார் 50 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பல ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.