சென்னை, மயிலாப்பூரில் நகைகளுக்காக ஆடிட்டர் மற்றும் அவரது மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் அவர்களை கொலை செய்த கார் ஓட்டுனர் லால் கிருஷ்ணா மற்றும் அவரது கூட்டாளியை ஆந்திர போலீசார் கைது செய்தனர்.


இந்தநிலையில், இந்த கொலை எப்படி நடந்தது என்பது குறித்து கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "கடந்த நவம்பர் மாதம் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா அமெரிக்காவில் உள்ள தங்களது மகளை பார்க்க சென்று, அங்கேயே சில காலம் தங்கியுள்ளனர். இடையில் ஒருமுறை மட்டும் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் பண பரிவர்த்தனைக்காக சென்னை வந்து சென்றுள்ளார். 


இதையடுத்து, இவர்கள் இருவரும் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு திரும்பியுள்ளனர். அப்பொழுதுதான் இவர்களை மயிலாப்பூரில் உள்ள வீட்டில் உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்து புதைத்துள்ளனர். இரண்டு பேரையும் தனித்தனி அறையில் தாக்கி கொலை செய்துள்ளனர். முதல் கொலையான அனுராதாவை வீட்டின் முதல் தளத்திலும், இரண்டாவது கொலையான ஸ்ரீகாந்தை அடித்தளத்திலும் தாக்கி போர்வையால் சுத்தி புதைத்துள்ளனர். 


தொடர்ந்து, திருடப்பட்ட நகைகளை எடுத்துக்கொண்டு தமிழகத்தை விட்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். கொலை செய்த கிருஷ்ணாவிற்கு ஆடிட்டர் ஸ்ரீகாந்த் அவரது வீட்டிலையே அறை கொடுத்துள்ளார். கிருஷ்ணாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து சில வருடங்களிலேயே டைவர்ஸ் ஆகியுள்ளது. அந்த பெண்ணும் ஒரு தமிழ் பெண். அவர் தற்போது கிருஷ்ணாவுடன் இல்லை. இவர்கள் இருவருக்கும் 15 வயதில் ஒரு பையன் இருக்கிறார். அவர் தற்போது டார்ஜிலிங்கில் படித்து வருகிறார். தனது பையனை கிருஷ்ணா டார்ஜிலிங்கில் உள்ள பள்ளியில் சேர்க்கும்போது ரவி ராய் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரவி ராயும் அடிக்கடி கிருஷ்ணாவின் ரூமில் வந்து தங்கியுள்ளார். 



இந்த சூழலில் எப்போதோ ஆடிட்டர் ஸ்ரீகாந்த் 40 கோடி பண பரிவர்த்தனை பேசியுள்ளார். அந்த பணம் ஸ்ரீகாந்த் வீட்டில் இருப்பதாக நம்பிய கிருஷ்ணா, ரவி ராய் கூட்டணி சேர்த்துக்கொண்டு, கொலை செய்யப்பட்ட இருவரும் அமெரிக்காவில் இருந்து சென்னை வரும்வரை காத்திருந்துள்ளனர். 


லாக்கரில் உள்ள பணத்தை எடுக்க எந்த சாவி என்று தெரியாத கிருஷ்ணாவும், ரவி ராயும் சாவி கொத்துக்காக இத்தனை மாத காலமாக பொறுமையுடன் இருந்துள்ளனர். வந்ததும் அவர்கள் இருவரையும் கொலை செய்து சாவி கொத்தை எடுத்துள்ளனர். 


லாக்கரை திறந்து பாரத்தபோது பணம் இல்லாமல், அதற்கு பதிலாக 1000 சவரன் நகை இருந்துள்ளது. நகையை திருடிய அவர்கள் போட்ட கணக்குப்படி 6 முதல் 7 மணி நேரத்திற்குள் கிருஷ்ணாவின் சொந்த நாடான நேபாளத்திற்கு ஓடிவிட்டால் தமிழ்நாடு காவல்துறையால் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்துள்ளனர். எங்களுக்கு இந்த முழு தகவல்கள் கிடைத்தது மதியம் 1 மணிக்குதான். நாங்கள் என்று அவர்கள் வீட்டை ஆய்வு செய்தபோது டெட்டால் போட்டு வீடு கழுவப்பட்டு இருந்தது. அதையும் எங்கள் புலனாய்வுதுறை அதிகாரிகள் கண்டு பிடித்து விட்டனர். 


வீட்டை சுற்றி பார்த்தோம். அப்பொழுது புதிதாக தோண்டப்பட்ட இடம் இருந்தது. சந்தேகமடைந்த நாங்கள் அதை தோண்டி பார்த்ததில் அவர்களது சடலத்தை கண்டறிந்தோம். தொடர்ந்து, கொலை செய்தவர்கள் நேபாளத்திற்கு செல்ல இருந்ததையும், அவர்கள் செல்ல இருக்கும் வழித்தடத்தையும் கண்டறிந்து ஆந்திரா போலீஸ் உதவியுடன் கைது செய்தோம். அவர்கள் சென்ற காரில் நகைகள், கொலை செய்ய பயன்படுத்திய உருட்டுக்கட்டை, கத்திகள் என அனைத்தையும் பறிமுதல் செய்தோம்" என்று தெரிவித்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண