சென்னை மாதவரம் எல்லைக்குட்பட்ட குமரன் நகர் அருகே ரோந்து வாகனத்தில் வெற்றிவேல், ஆரிப்  என்ற  காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே கொளத்தூர் வெங்கடசாய் நகரை சேர்ந்த ஜான் பிரான்சிஸ் (28)  என்பவர் இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு வந்திருந்தார். அவரை மடக்கி வாகனத்தின் உரிமை ஆவணங்களை கேட்ட போது அவர் தீடீரென வாகனத்தை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். போலீசார் அவரை பிடிக்க முயற்சித்த போது வெற்றிவேல் என்ற காவலரை முகத்தில் தாக்கினார். பின்னர் அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்‌. முகத்தில் காயங்களுடன் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  காவலர் வெற்றிவேல் சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பினார். இது குறித்து மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் காளிராஜ் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.



வேலையை முடித்து விட்டு சாலையில் சென்ற நபரை கத்தியால் தாக்கி செல்போன் பறித்த 2 பேர் கைது



சென்னை ஓட்டேரி சுப்புராயன் நான்காவது தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் வயது  23. இவர் சோழிங்க நல்லூரில் உள்ள இரு சக்கர வாகன ஷோரூமில் வேலை செய்து வருகிறார். இரவில் வேலை முடித்து வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது ஓட்டேரி கே.எம் கார்டன் பெரம்பூர் பேரக்ஸ் சாலை பகுதியில் இரண்டு பேர் வழிமறித்து செல்போனை பறிக்க முயன்றனர். அப்போது கணேஷ் செல்போனை தர மறுக்கவே மர்ம நபர்கள் இரண்டு பேரும் தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து வெட்ட முயற்சி செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்து தப்பித்த கணேஷ் செல்போனை அவர்களிடம் கொடுத்து விட்டு அந்த இடத்திலிருந்து ஓட்டம் பிடித்தார்.

 


 

அப்போது அவ்வழியாக வந்த ஓட்டேரி ரோந்து போலீசாரிடம் நடந்ததை கணேஷ் கூறியுள்ளார். இதனையடுத்து ஓட்டேரி  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கத்தியுடன் சுற்றித் திரிந்த இரண்டு பேரையும் மடக்கி பிடித்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர்கள் புளியந்தோப்பு கே.எம் கார்டன் 6 வது தெருவைச் சேர்ந்த ரமேஷ் குமார் (எ) நாய்க்கறி ரமேஷ் 21. மற்றும் அதே பகுதியை சேர்ந்த வல்லரசு வயது 20 என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ஒரு செல்போன் ஒரு கத்தி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.