செங்கல்பட்டு : இடிந்து விழுந்த அரசு மருத்துவமனை கூரை..தப்பித்த தாய் சேய்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் தாயும் சேயும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Continues below advertisement
செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் தாய் சேய் நல பிரிவில் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் படுக்கையில் இருந்த தாயும், குழந்தையும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து மருத்துவ நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் தாய் சேய் நல பிரிவில் சுமார் 50 க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன. இதில் செங்கல்பட்டு மாவட்டம் தவிர்த்து, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் எடப்பாளையம் பகுதியை சார்ந்தவர் தனசேகரன் -  லோகேஸ்வரி தம்பதி இவர்களுக்கு கடந்த 19 ஆம் தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இதனையடுத்து தாய் சேய் முதல் மாடியில் உள்ள வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த வார்டில் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து குழந்தை தாய் படுத்திருந்த கட்டில் மீது விழுந்துள்ளது . இதில் விழுந்த கூரை யார் மீதும் படாத காரணத்தினால் தாயும் குழந்தையும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

 
இதுகுறித்து லோகேஸ்வரியின் கணவர் தனசேகரன், நிலைய மருத்துவ அலுவலர் அனுபமாவிடம் அளித்துள்ள புகாரில், இன்று அதிகாலை 3:30 அளவில் திடீரென்று மேல் கூரை இடிந்து விழுந்துள்ளது. அந்த சமயத்தில், இது குறித்த தெரிவிக்கக் கூட சம்பந்தப்பட்ட வார்டில் உதவியாளர்களோ , செவிலியர்களோ இல்லை எனப் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
 
இதுகுறித்து செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனை முதல்வர் முத்துக்குமார் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, தாய்-சேய் வார்டில் சிறிதளவு உடைந்து விழுந்துள்ளது. உடைந்து விழுந்த பகுதியிலிருந்த அனைவரும் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறோம். பொதுப்பணித்துறை நிறுவனம் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது, அவர்களும்  இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, அதை சரி செய்யும் பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

 
 
அதேபோல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள பழைய கட்டிடங்களை முறையாக பராமரிக்காத காரணத்தினால், பல இடங்களில் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து உள்ளதாகவும், பல இடங்களில் இதே போன்ற நிலை காணப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது .
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

Continues below advertisement
Sponsored Links by Taboola