கொரோனா நோயின் இரண்டாம் அலையின் தீவிரத்தால் பெரும்பாலான பொதுமக்கள் வேலையிழந்து வறுமையில் வாடிவந்த சூழ்நிலையில் , தமிழக முதல் அமைச்சராக மு க ஸ்டாலின் கடந்த மே மாதம் 7-ஆம் தேதி பொறுப்பேற்றவுடன் கொரோனா நிவாரண தொகை 4 ஆயிரம் ரூபாய் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய  தொகுப்புகள் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்படும்  என்று அறிவித்திருந்தார் .


அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 4,29,234  அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு , 698 நியாய விலை கடைகள் மூலம் கடந்த மே மாதம் முதல் கட்டமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.  இரண்டாவது கட்டமாக நேற்று முன்தினம் முதல் மீதமுள்ள 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் பணியும் தொடங்கியது.




இதனுடன் முதலமைச்சர் அறிவித்திருந்த கோதுமை மாவு, உப்பு, கடுகு , சீரகம் , சர்க்கரை, ரவை, புளி, உளுத்தம் பருப்பு,  மஞ்சள் தூள், மிளகாய் பொடி, குளியல் சோப் உள்ளிட்ட 14  பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் பணியும் நேற்று முன்தினம் முதல்  தொடங்கியது. அனைத்து இடங்களிலும் வெற்றிகரமாக தொடங்கப்பட்ட இந்த திட்டம் , பொருட்கள் பற்றாக்குறையால் , இன்று வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அங்கங்கே வழங்கப்படும் ஒருசில இடங்களில் தொடர்ந்து குளறுபடிகள் நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் ஒருவர் கூறுகையில் வேலூர் , ஓல்டு டவுன் பில்டர்பெட் ரோடு அருகே இயங்கிவரும் நியாய விலை கடையில் வழங்கப்படும் இலவச தொகுப்பு பொருட்களில் , தொடர்ந்து சில பொருட்கள் விடுபடுவதாக புகார் தெரிவித்தார் .




இதுகுறித்து , ஓல்டு டவுன் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவர் கூறுகையில், பில்டர்பெட் ரோடு ரேஷன் கடையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக , வழங்கப்பட்டு 14 வகை இலவச தொகுப்பில் சீரகம், கடுகு, சோப்பு உள்ளிட்ட பொருட்கள் இல்லாமல் உள்ளது. இது எனக்கு மட்டும் இல்லை என்னுடன் நேற்று கடையில் பொருள் வாங்கின 10-க்கும் மேற்பட்டோர்க்கு இதே நிலைதான். இதுகுறித்த அந்த கடை சேல்ஸ்மேனை கேட்டல், “வரும் பொழுதே பொருட்கள் ஒன்னு ரெண்டு கம்மியாதான் வருது" என்று மூஞ்சால் அடிச்சதுபோல் பதில் கூறுகிறார் என்று தெரிவித்தார் .  


இது குறித்து விசாரிக்க மாவட்ட வட்டல் வழங்க அலுவலர் காமராஜை தொடர்புகொண்டபொழுது , மொத்தமுள்ள 4 .30 லட்சம் அரிசி குடும்ப அட்டைதார்களில் , இது வரை 50 சதவீத அட்டைதார்களுக்கு பணம் மற்றும் தொகுப்பு பொருட்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாகவும், தொகுப்பு பொருட்கள் பற்றாக்குறையால் இன்று ஒருசில நியாய விலை கடைகளில் தொகுப்பு பொருட்கள் வழங்கும் பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இன்று 75000 குடும்ப அட்டைதாரர்களுக்கான தொகுப்பு வந்துள்ளது என்றும் இதனை நாளையில் இருந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்தார் .


மேலும் ஓல்டுடவுன் பகுதியில் இயங்கி வரும் நியாயவிலை கடை மீதான  குற்றச்சாட்டை பற்றி கேட்டபொழுது, “இதுபோன்ற புகார்கள் அதிகளவில் வந்துகொண்டு தான் இருக்கிறது . மொத்தமாக வரப்பட்ட பொருட்களை  பிரித்து 14 தொகுப்பாக பேக் செய்யும்பொழுது, ஒன்று இரண்டு பொருட்கள், கவனக்குறைவாகவோ அல்லது தவறுதலாகவோ விடுபடுவதற்கு சாத்தியம் அதிகம் இருக்கும் சூழ்நிலையில், பொதுமக்கள் தொகுப்புக்களை வாங்கும்பொழுதே நியாய விலை கடைகளில் வைத்தே சரி பார்த்துபிறகு எடுத்து செல்லவேண்டும். வீட்டிற்கு கொண்டு சென்றுவிட்டு திரும்பி வந்து முறையிட்டால் எப்படி நியாயமாகும். எனினும் அந்த குறிப்பிட்ட நியாய விலை கடை ஊழியரிடம் விசாரணை நடத்திவருகிறோம்" என்று தெரிவித்தார். "எப்படியும் எங்களுக்கு விடுபட்ட பொருட்கள் திரும்பக்கிடைக்க போவதில்லை" என்று புலம்புகின்றனர், வேதனையில் பொதுமக்கள் .