சென்னை பழைய மகாபலிபுரம் சாலை நாவலூர் பகுதியில் உள்ள புட் ஸ்ட்ரீட் பகுதியில் உணவு டெலிவரியில் வேலை செய்வது போல் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ரவி உத்தரவின்பேரில், கானத்தூர் காவல் ஆய்வாளர் வேலு தலைமையில்  தாழம்பூர் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

 




 

அப்போது ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஸ்விகி நிறுவனத்தில் பணிபுரிவது போல் உடை அணிந்து கஞ்சா விற்பனையில் இடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கைது செய்து தாழம்பூர் காவல் நிலையம் அழைத்துசென்று விசாரணை மேற்கொண்டபோது அவர் ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த 30 வயதான பிரகாஷ்குமார் சேனாபதி என்பது தெரியவந்தது.  இவரிடமிருந்து 1 கிலோ 250 கிராம் எடை கொண்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சா விற்பதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.  தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 




 

முதற்கட்ட விசாரணையில், கைதான நபர் தெரிவிக்கையில் வேறு எப்படிப் போனாலும் காவல்துறையினர் பரிசோதனை செய்யும்போது சோதனைச் சாவடிகளில் கஞ்சாவை காவலர்கள் பறிமுதல் செய்து விடுகிறார்கள். எனவே காவல்துறையினர் பரிசோதனை செய்யாமல் இருப்பதற்காக ஆன்லைன் உணவு டெலிவரி உடை அணிந்து கொண்டு மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததாக தெரிவித்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில்  கஞ்சா விற்பனை அதிரித்து வரும் நிலையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் தரப்பில் இருந்து எழுந்துள்ளது.