பொறியாளர்கள் வழிகாட்டுதல் அவசியம்
சமீப காலமாக சென்னை போன்ற நகரங்களில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் புதிய வடிவமைப்புகளில் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. சில ஆண்டுகள் முன்பு வரை ஒரு பகுதியில் ஏதாவது ஒரு கட்டடம் மட்டுமே வழக்கத்து மாறாக வடிவமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் தற்போது பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள் வித்தியாசமான வடிவமைப்புகளில் கட்டப்படுவதை பரவலாக பார்க்க முடிகிறது.
குறிப்பாக கட்டடங்கள் கட்டும் போது அதன் அடிப்படை கூறுகள் பாகங்களின் அளவுகளை கட்டட அமைப்பியல் வல்லுனர் வாயிலாக முடிவு செய்ய வேண்டும். அழகு, கலை வேலைப்பாடுகள் ஆகியவற்றுக்கு அப்பால், கட்டடத்தின் நிலையான பாகங்களால் ஏற்படும் சுமை என்ன பயன்பாட்டில் ஏற்படும் சுமை ஆகியவற்றின் அடிப்படையில் பாகங்களை முடிவு செய்வர். இந்த விஷயத்தில் கட்டட அமைப்பியல் பொறியாளர்கள் வழிகாட்டுதல் அவசியம். இதற்கு அடுத்த நிலையில் தான் கட்டட வடிவமைப்பாளர்களின் பணிகள் துவங்குகின்றன.
போதுமான விழிப்புணர்வு இல்லை
பெரும்பாலான மக்கள் கட்டடத்தின் பாகங்கள் எங்கு எப்படி அமைய வேண்டும், அறைகளின் அளவுகள் ஆகியவையே வரைபடங்களில் குறிப்பிடப்படும் என்று மக்கள் நினைக்கின்றனர். நிலத்தின் அமைவிடத்தை பற்றி கவலைப்படாமல் அளவுகளை மட்டும் கணக்கில் வைத்து வீட்டை வடிவமைக்கும் போது கட்டுமான ரீதியாக பல்வேறு பிழைகள் வரும்.
இதில் மேலோட்டமாக பார்க்கும் போது வரைபடம் கட்டடத்தின் தோற்றம் அழகாக இருப்பதாக தெரியலாம். ஆனால், கட்டுமான பணிகள் முடிந்து பயன்படுத்தும் நிலையில் தான் வடிவமைப்பு ரீதியாக ஏற்பட்ட பிழைகள் தெரிய வரும். கட்டுமான வடிவமைப்பு பிழைகள் என்ன என்பதை அறிந்து கொள்வதிலேயே மக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை.
வடிவமைப்பு விபரம் - கட்டுமான நிறுவனத்திடம் கேட்க வேண்டும்
கட்டட வடிவமைப்பு பிழையுள்ள வீடுகளை மக்கள் விபரம் தெரியாமல் வாங்கி விடுவதை பரவலாக பார்க்க முடிகிறது. இதில் கட்டடத்தின் வெளிப்புற தோற்றத்தில் காணப்படும் பிழைகள், உட்புறத்தில் காணப்படும் பிழைகள் என இரண்டு வகை உள்ளன. வெளிப்புற தோற்றத்தில் அழகுபடுத்துகிறோம், வித்தியாசமாக காட்டுகிறோம் என்ற நோக்கத்தில் செய்யப்படும் மாற்றங்கள் சில சமயங்களில் வடிவமைப்பு பிழையாக அமைந்து விடுகின்றன.
எனவே நீங்கள் வீடு வாங்கும் அடுக்குமாடி கட்டடத்தின் வெளிப்புற தோற்ற வடிவமைப்பு குறித்த விபரங்களை கட்டுமான நிறுவனத்திடம் கேட்க வேண்டும். அதே போன்று, வீட்டின் உட்புறத்தில் வடிவமைப்பு கவன குறைவு காரணமாக சில பிழைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக பிரதான வாயில் பகுதியில் நின்று பார்த்தால் வீட்டின் எந்த அறையின் உட்புறமும் தெரிய கூடாது என்பதை கவனிக்க வேண்டும்.
அதே போன்று படுக்கை அறையின் வாயில் அல்லது அதற்கு வெளியில் இருந்து பார்க்கும் போது அலமாரிகள், குளியலறையின் உட்புறம் தெரிய கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது மட்டுமல்லாது பெரிய அளவிலான பொருட்களை வெளியில் இருந்து கொண்டு வரும் போது கடைசி பகுதி வரை செல்ல சிக்கல் இல்லாத வழி இருக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுநர்கள்.