" என்னுடன் வாழவில்லை என்றால், யாருடனும் வாழ முடியாது "

பெங்களூருவைச் சேர்ந்தவர் ரேஷ்மா ( வயது 29 ) அசோக் என்பவரை திருமணம் செய்து சென்னை அனகாபுத்துார் சத்யா நகரில் வசித்து வந்தார். இவர்களுக்கு ஜஸ்வந்த் ( வயது 9 ) யாத்திகா ( வயது 8 ) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக கணவரை பிரிந்து இரண்டு மாதங்களாக, மகள் யாத்திகாவுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

Continues below advertisement

ரேஷ்மாவின் அத்தை மகனான, பெங்களூருவைச் சேர்ந்த விஜி ( வயது 30 ) என்பவர், அடிக்கடி ரேஷ்மா வீட்டிற்கு வந்து தங்கி சென்றதாகவும் கருத்து வேறுபாடால் ரேஷ்மா அவரிடம் சரிவர பேசாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரேஷ்மாவின் வீட்டிற்கு சென்ற விஜி , ‘என்னுடன் வாழவில்லை என்றால், யாருடனும் வாழ முடியாது’ என மிரட்டி விட்டு சென்றுள்ளார்.

பெப்பர் ஸ்பிரே - கை , கால்களில் வெட்டு

இதனால் அச்சமடைந்த ரேஷ்மா, பக்கத்து தெருவில் அருகில் வசிக்கும், தன் தோழி மரியா, அவரது சகோதரி ஜெனிபர் ஆகியோரை, துணைக்கு அழைத்து வீட்டில் தங்க வைத்துள்ளார். இந்நிலையில் அதிகாலை மீண்டும் ரேஷ்மா வீட்டிற்கு சென்ற விஜி கதவை திறக்குமாறு தட்டியுள்ளார்.

Continues below advertisement

உள்ளே இருந்தவர்கள் கதவை திறக்க மறுத்த நிலையில், ஜன்னல் வழியாக கையை விட்டு, கதவை திறந்த விஜி வலுக் கட்டாயமாக வீட்டிற்குள் நுழைந்துள்ளார். தான் வைத்திருந்த ‘பெப்பர் ஸ்பிரே ’யை உள்ளே இருந்தவர்கள் மீது தெளித்து விட்டு மறைத்து வைத்திருந்த கத்தியால் ரேஷ்மாவின் கை , கால் மற்றும் கழுத்து பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில், படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ரேஷ்மா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலிறந்து வந்த போலீசார், ரேஷ்மாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்த கொலை தொடர்பாக, சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான விஜியை தேடி வருகின்றனர். அவர் கைது செய்யப்பட்ட பிறகே, கொலைக்கான உண்மை காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.