வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து, சென்னை வந்த விமானத்தின் கழிவறைக்குள், ரூ. 1 கோடி மதிப்புடைய 1.6 கிலோ தங்க கட்டிகள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல். தங்க கட்டிகளை விமானத்தின் கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் மறைத்து வைத்துவிட்டு, தலைமறைவான கடத்தல் ஆசாமியை, சுங்க அதிகாரிகள் தேடி வருகின்றனர்.


இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்


சென்னை (Chennai News): வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் விமானத்தை விட்டு கீழே இறங்கி சென்று  விட்டனர். அதன் பின்பு அந்த விமானம், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, உள்நாட்டு விமானமாக கேரள மாநிலம் கொச்சிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும்.


விமான நிலைய மேலாளருக்கு தகவல்


இதை அடுத்து விமான நிறுவன லோடர்கள், விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விமானத்தின் கழிவறை தண்ணீர் தொட்டிக்குள், பார்சல் ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர். இதை அடுத்து விமான லோடர்கள் சுத்தப்படுத்தும் பணியை  நிறுத்திவிட்டு, விமான நிலைய மேலாளருக்கு தகவல் கொடுத்தனர்.


வெடிகுண்டு ஏதாவது இருக்கிறதா? என்று பரிசோதித்தனர்


உடனடியாக சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்துக்குள் ஏறி தண்ணீர் தொட்டிக்குள் இருந்த பார்சலை எடுத்து மெட்டல் டிடெக்டர் மூலம், வெடிகுண்டு ஏதாவது இருக்கிறதா? என்று பரிசோதித்தனர். வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரிந்ததும், பார்சலை பிரித்து பார்த்த போது,6 தங்கக் கட்டிகள் இருந்தன. இதை அடுத்து அங்கு கட்டிகள் இருந்த பார்சலை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.


6  தங்க கட்டிகளின்  எடை 1.6 கிலோ


சுங்க அதிகாரிகள் பார்சலை கைப்பற்றி, தங்கக் கட்டிகளை ஆய்வு செய்தனர். 6  தங்க கட்டிகளின்  எடை 1.6 கிலோ. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூபாய் ஒரு கோடி. இதை அடுத்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்துகின்றனர். சென்னை விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள்,  விமானத்தில் உள்ள கேமரா காட்சிகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்கின்றனர்.


அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


சென்னைக்கு வழக்கமாக, துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் இருந்து தான் அதிக அளவில், தங்கம் கடத்தி வரப்படும். ஆனால் தற்போது முதல் முறையாக வங்கதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து, சென்னை வந்த விமானத்தில், இந்தக் கடத்தல் தங்கம் சிக்கியுள்ளது. இது குறித்தும் சுங்க அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.