மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் மறைவிற்கு சத்குரு இரங்கல் தெரிவித்துள்ளார். 


பங்காரு அடிகளார் மறைவு


83 வயதான பங்காரு அடிகளார் உடலநலக்குறைவால் நேற்று (20.10.2023) காலமானார். ஏராளமான பக்தர்கள் நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


சத்குரு இரங்கல்


பங்காரு அடிகளார் மறைவிற்கு சத்குரு தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில் “ பங்காரு அடிகளாரின் மறைவால் வாடும் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். தமிழ்நாட்டிற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக  என்றும் நினைவில் இருப்பார்.” என்று குறிப்பிட்டுள்ளார். 


மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவியவர் பங்காரு அடிகளார். இவர், மேல்மருவத்தூரைச் சேர்ந்த விவசாயிகளான கோபால் - மீனாம்பிகை அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். பங்காரு என்றால் தெலுங்கு மொழியில் தங்கம் என்று பொருள். இவர் ஆசிரியராக பணிபுரிந்த காலத்தில் பள்ளி ஆசிரியையான லட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர், 1970-களில் சக்தி பீடத்தை நிறுவி பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லிவந்தார். ஆன்மீகத்துடன் சமுதாய தொண்டும் செய்து வந்தார். காஞ்சிபுரத்தில் 1778-ல் ஆதிபராசக்தி வார வழிபாடு மன்றம் தொடங்கப்பட்டது. 15-க்கும் மேற்பட்ட்ட நாடுகளில் இவரை பின்பற்றுபவர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்களை பின்பற்றும் பக்தர்கள் பங்காரு அடிகளாரை ‘அம்மா’ என்று அழைப்பது வழக்கம். 


ஆதி பராசக்தி சித்தர் பீடம் சார்பில் பல்வேறு கல்வி நிறுவனங்களும் இவர் நடத்தி வருகிறார். ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழைபடலாம் என்று கடவுள் வழிபாட்டில் புரட்சி செய்தார்.  அவரது சேவையை பாராட்டி கடந்த 2019 மத்திய அரசு அவருக்கு பத்ம ஸ்ரீ வழங்கியது குறிப்பிடத்தக்கது. 


மறைந்த பங்காரு அடிகளார் இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 


மறைந்த பங்காரு அடிகளாருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பக்தர்கள் அவரது வீட்டில் மேல்மருவத்தூரில் குவிந்து வருகின்றனர்.  




மேலும் வாசிக்க..Bangaru Adigalar Death LIVE: பங்காரு அடிகளார் மறைவு .. மேல்மருவத்தூரில் குவிந்து வரும் பக்தர்கள்.. பலத்த போலீஸ் பாதுகாப்பு