ஆந்திரா மாநிலத்தை அச்சுறுத்தும் அசானி புயல் எச்சரிக்கை  காரணமாக  சென்னையில் இருந்து இன்று காலை 7 மணிக்கும், காலை  10:40 மணிக்கும் விசாகப்பட்டினம் செல்லும் 2  இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதைப்போல் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய இன்று காலை 10:40 மணிக்கும், பகல் 1.45 மணிக்கும் சென்னை வரவேண்டிய 2 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.




ஏா் ஏசியா விமான நிறுவனம் சென்னையிலிருந்து ஹைதராபாத்,ஜெய்பூா்,மும்பை ஆகிய இடங்களுக்கு செல்லும் 3 விமானங்கள்,அதைப்போல் ஹைதராபாத்,ஜெய்பூா்,மும்பை ஆகிய இடங்களிலிருந்து சென்னை வரும் 3 விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.இதையடுத்து அசானி புயல் காரணமாக சென்னை விமானநிலையத்திலிருந்து விசாகப்பட்டிணம்,ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் 10 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் ரத்து பற்றிய தகவல்கள் பயணிகளுக்கு  விமான நிறுவனங்கள்  நேற்று மாலையே கொடுத்துவிட்டதால், பயணிகள் விமான நிலையத்திற்கு வந்து அவதிப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




அசானி புயல்


தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய "அசானி" புயல் தீவிர புயலாக வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவியது.  இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்துஇன்று (10.05.2022) வட ஆந்திரா - ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக் கூடும். அதன்பிறகு வடக்கு-வடகிழக்கு திசையில் ஒரிசா கடற்கரை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரக் கூடும். இது அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக புயலாக வலுவிழக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.





நேற்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டது அதன் அடிப்படையில் தேனி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மிதமான சூழலுடன் கூடிய மழை பெய்தது.  அதேபோல நேற்று நள்ளிரவு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னையின் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்