30 ஆண்டுகளுக்கு முந்தைய வட தமிழ்நாடு எப்படி இருந்தது என நினைவிருக்கிறதா? வேண்டாம் என விலகி செல்கிறோம். தேர்தல் வந்தாலே தமிழகத்தின் இரண்டு பெரும்பான்மைச் சாதிகளையும் அடித்துகொள்ள வைத்து வாக்கு வாங்குவதுதான் திராவிட மாடலா என்றும் அன்புமணி விமர்சனம் செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெல்வாய் கிராமத்தில் ஒரு கும்பலால் பெட்ரோல் ஊற்றி தீவைத்து தாக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த இளைஞர் தமிழரசன் உயிரிழந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தமிழரசனுடைய உடலை பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டு, தமிழரசன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், கடந்த வாரம் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகேயுள்ள நெல்வாய் கிராமத்தில் இரண்டு பாமக தொண்டர்களை வன்முறைக் கும்பல் ஒன்று கடுமையாக தாக்கி பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளது.
அதில் தமிழரசன், விநாயக கணபதி என இருவர் உயிருக்கு போராடும் நிலையில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்கப்பட்டனர். நேற்று மாலை தமிழரசன் இறந்து விட்டார். 21 வயது இளைஞரான தமிழரசன் இறந்ததால் நாங்கள் மிகுந்த சோகத்தில் உள்ளோம். பெட்ரோல் ஊற்றி கொளுத்தும் துணிச்சல், தைரியம் அந்த பகுதியில் சிலருக்கு இருக்கிறது என தெரிவித்தார்.
திட்டமிட்டு நடைபெறும் சம்பவம்
இதற்கு காரணமான 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இது தனிப்பட்ட விரோதத்தால் நடந்த சம்பவம் இல்லை. கடந்த சில மாதமாக வட தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. சில தலைவர்கள் தூண்டுதலால் இதுபோன்ற வன்முறை நடக்கிறது என்று குற்றச்சாட்டை முன் வைத்தார் .
இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி படித்து முன்னேறுங்கள் என எங்கள் இளைஞர்களுக்கு நாங்கள் சொல்கிறோம், ஆனால் அடங்க மறு, அத்துமீறு, திருப்பி அடி, வெட்டு என்று சொல்லும் சில தலைவர்களால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.
விசிக ஆதரவாளர்கள்
காவல்துறையின் கையாலாகாத தனமும் இதற்கு காரணம். கைதான 6 பேரும் திருமால்பூர் எனும் நெல்வாய் அருகிலுள்ள கிராமத்தை சார்ந்தவர்கள். கைதானவர்களில் ஒருவர் விசிக உறுப்பினர், மற்ற 5 பேர் விசிக ஆதரவாளர்கள். கஞ்சா விற்பது அந்த இளைஞர்களின் தொழிலாக உள்ளது. காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர்தான் இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்தார்.
ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்
இறந்த தமிழரசனின் தந்தையும் சில ஆண்டுகளுக்கு முன் தலையில் அடித்து சிலரால் கொல்லப்பட்டுள்ளார். இறந்த தமிழரசன் குடும்பத்திற்கு முதலமைச்சர் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கி, தமிழரசன் தம்பிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தேர்தல் நெருங்கினாலே 2 சமூகத்தையும் அடித்துக்கொள்ள வைத்து வாக்கு வாங்குவதுதான் திராவிட மாடலின் தேர்தல் யுக்தியா?. தமிழ்நாட்டில் பெரும்பான்மை சமூகமான 2 சமுதாயமும் வளர்ச்சி அடையாமல் பாதாளத்தில் உள்ளது.
30 ஆண்டுக்கு முந்தைய வட தமிழ்நாடு எப்படி இருந்தது என அனைவருக்கும் தெரியும். தினமும் கலவரம் நடந்தது அதெல்லாம் வேண்டாம் என்றுதான் வளர்ச்சியை நோக்கி எங்கள் தொண்டர்களை அழைத்து செல்கிறோம். இதுபோன்ற சம்பவம் இனி எங்கும் நடக்க கூடாது.
அடுத்தக்கட்டத்திற்கு இந்த பிரச்சனை செல்லக் கூடாது என நான் நினைக்கிறேன். திருமால்பூர் கிராமத்தில் காவல்துறைக்கு தெரியாமல்தான் கஞ்சா விற்பனை நடக்கிறதா? தமிழரசன் உடலை வாங்குவது குறித்து அவரது குடும்பத்தினர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.