சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேர் கைது நடவடிக்கை மற்றும் போராட்ட பந்தல் அகற்றம் ஆகியவற்றால் திராவிட மாடல் அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு அம்பலமானது என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.


சாம்சங் ஊழியர்கள் போராட்டம் - Samsung Employee Strike 


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அந்த வகையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில், உலகின் முன்னணி நிறுவனமான சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 1500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 


சில மாதங்களுக்கு முன்பு தொழிற்சாலையில், தொழிலாளர் சிஐடியு தொழிற்சங்கத்தை தொடங்கினர். தொழிற்சங்கத்திற்கு அனுமதி வழங்க வேண்டும், இந்த கோரிக்கையை சாம்சங் நிர்வாகம் நிராகரித்தது. இந்தநிலையில் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி முதல் 900க்கும் மேற்பட்ட சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


திடீர் சோதனை செய்த போலீஸ்


நேற்று போராட்டம் நடைபெறும் பகுதியில் சாலையோரம் இருபுறங்களும் காவலர்களை அமர்த்தி இருசக்கர வாகனத்திலும், தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்து செல்லும் சாம்சங் ஊழியர்கள் உடை அணிந்து வருபவர்களை அடையாள அட்டையை சோதனை செய்த பின் காவலர்கள் அனுமதிக்கப்பட்டு ஊழியர்களைப் போராட்டத்திற்கு அனுமதித்தனர்.


தனியார் பேருந்தில் செல்லும் சாம்சங் ஊழியர்களை காவலர் ஒருவர் வலுக்கட்டாயமாக அடையாள அட்டையை காண்பிக்க செய்து ஊழியர்களுக்கும் பொதுமக்களும் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில் காவலர் ஒருவர் சாம்சங் நிர்வாக உடைய அணிந்திருக்கும் ஊழியர்களின், அடையாள அட்டையை கேட்டு வாங்கி சோதனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சொல்வது என்ன ?


இது தொடர்பாக ஏபிபி நாடு சார்பில், காவல்துறையிடம் விளக்கத்தை பெற முயற்சித்தோம். இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை தெரிவித்ததாவது: சமூக விரோதிகள், மாவோயிஸ்டுகள் சிலர் தொழிலாளர்கள் என்ற போா்வையில் உள்நுழைந்து அவா்கள் வன்முறை போராட்டமாகவும், அரசுக்கு எதிரான போராட்டமாகவும் திசை திருப்ப முயலுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், உண்மையான சாம்சங் கம்பெனி தொழிலாளா்களை போலீசாா் தடுக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளனர். 


இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-


காஞ்சிபுரம் மாவட்டம்  சுங்குவார் சத்திரத்தில் தொழிற்சங்க அங்கீகாரம், 8 மணி நேர வேலை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் நிறுவனத்  தொழிலாளர்கள் கடந்த சில வாரங்களாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களின் போராட்ட  பந்தலை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறையினர் நேற்று இரவோடு, இரவாக அகற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி, போராட்டத்தை முன்னெடுத்த தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேரை கைது செய்து  சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்துள்ளனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.


தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பது தான் தங்களின்  முதன்மை நோக்கம் என்று கூறி வந்த தமிழக அரசு, இப்போது அப்பட்டமாக சாம்சங் நிறுவனத்தின் கையாளாக மாறி தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து இரு தரப்பினரையும் அழைத்துப் பேசிய தமிழக அரசு, அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை கண்டிருக்க வேண்டும். ஆனால், ஒரு பொம்மை தொழிற்சங்கத்தை உருவாக்கி சாம்சங் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில்  கையெழுத்திடச் செய்த அரசு, அதற்கு உடன்படாத  தொழிலாளர்களை மிரட்டிப் பணிய வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


திராவிட மாடல் அரசு என்பது எப்போதும் முதலாளிகளுக்கான அரசு தான் என்பதும்,  தொழிலாளிகளின் நலன் குறித்து அது ஒருபோதும் கவலைப்படாது என்பதும் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரையும்  விடுதலை செய்ய வேண்டும். தமிழக அரசின் இந்த அடக்குமுறையையும், துரோகத்தையும் தொழிலாளர் சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது. மக்கள்விரோத அரசுக்கு தொழிலாளர்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் என்பது உறுதி என தெரிவித்துள்ளார்.