சென்னையில் இருந்து, சிங்கப்பூருக்கு செல்ல இருந்த விமானத்தில், அமெரிக்க நாட்டு தொழிலதிபர், தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போனுடன் பயணம் செய்ய முயன்றதால் பரபரப்பு. விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், சேட்டிலைட் போனை பறிமுதல் செய்து, அமெரிக்க தொழிலதிபரின் சிங்கப்பூர் பயணத்தை ரத்து செய்து, தொடர்ந்து விசாரணை.

 

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று காலை 10:30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. அந்த விமானத்தில், சிங்கப்பூர் செல்வதற்காக அமெரிக்க நாட்டைச் சேர்ந்த  ஆண்ட்ரூ ரூபன் (52) என்ற பயணி வந்தார்.

 

இப்போது சென்னை விமான நிலையத்தில், குடியரசு தின விழா கொண்டாட்டத்தை ஒட்டி, 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமுலில் இருப்பதால், ஒவ்வொரு பயணியையும், பாதுகாப்பு அதிகாரிகள் நிறுத்தி, அவர்களுடைய கைப்பை மற்றும் உடைமைகளை துருவித் துருவி சோதனை இடுகின்றனர்.

 

அதை போல் அமெரிக்க பயணி ஆண்ட்ரூ ரூபன் கைப்பையை சோதனை இட்டனர். கைப்பைக்குள் சேட்டிலைட் போன்  இருந்ததை கண்டுபிடித்தனர். நமது நாட்டில் சேட்டிலைட் போன் உபயோகிக்க, காப்பு காரணங்களுக்காக, ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. ஆனால் தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போனுடன், அமெரிக்க பயணி பயணம் செய்ய முயன்றது, பாதுகாப்பு அதிகாரிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இதை அடுத்து ஆண்ட்ரூ ரூபன், சிங்கப்பூர் பயணத்தை பாதுகாப்பு அதிகாரிகள், ரத்து செய்தனர். அதோடு சாட்டிலைட் போனை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

 

அப்போது ஆண்ட்ரூ ரூபன், அமெரிக்காவைச் சேர்ந்த தான், தொழில் அதிபர். தொழில் விஷயமாக, பிசினஸ் விசாவில், நேற்று புதன்கிழமை அதிகாலை துபாயில் இருந்து எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்தேன். அப்போது இந்த சேட்டிலைட் போனை எனது கைப்பையில் தான் வைத்திருந்தேன். ஆனால் சுங்க அதிகாரிகள்  பரிசோதித்த போது, சாட்டிலைட் போனை கண்டு கொள்ளவில்லை. மேலும் எங்கள் நாட்டில் சேட்டிலைட் போன் உபயோகிக்க தடை ஏதும் இல்லை. அப்படி இருக்கையில், இப்போது நான் சிங்கப்பூர் செல்லும்போது, தடுத்து நிறுத்தி போனை ஏன் பறிமுதல் செய்கிறீர்கள்? என்று கேட்டு வாக்குவாதம் செய்தார். அதற்குப் பாதுகாப்பு அதிகாரிகள், எங்கள் நாட்டு சட்ட விதிகளின்படி, சாட்டிலைட் போனை, பயணி ஒருவர் எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று, கூறிவிட்டனர்.

 

இதை அடுத்து அமெரிக்க தொழில் அதிபர் ஆண்ட்ரூ ரூபனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதோடு இந்திய நாட்டு பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு முரணாக, சாட்டிலைட் போனுடன், சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல முயன்ற, அமெரிக்க நாட்டு பயணி ஒருவரை, சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைத்து, அவர் வைத்திருந்த சேட்டிலைட் போனையும் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருவது குறித்து, சென்னையில் உள்ள அமெரிக்க நாட்டு தூதரகத்திற்கும்  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டு தொழிலதிபர் ஒருவர் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள சேட்டிலைட் போனுடன் பயணம் செய்ய முயன்று, சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.