போன் , லேப்டாப் விலை அதிகரிக்கும் நிலை ?
கணினி உள்ளிட்ட சாதனங்களில் முக்கியமாக பயன்படுத்தப்படும் 'ரேம்' உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், தற்போது ஏ.ஐ தொழில் நுட்பத்துக்கு முன்னுரிமை அளிக்கின்றன. இதனால் ரேம் சாதனத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஸ்மார்ட் போன், லேப் டாப் விலை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல் போன், டிஜிட்டல் கேமரா, கேமிங் சாதனங்கள் போன்றவற்றில், 'ரேம்' அதாவது, 'ரேன்டம் ஆக்சஸ் மெமரி' எனப்படும் தற்காலிக நினைவக சாதனம் பயன்படுத்தப்படுகிறது. இது சாதனங்களின் இயக்க முறையின் வேகமான செயல்பாட்டுக்கு உதவுகிறது.
20 - 30 சதவிகிதம் வரை விலை உயரும்
இந்த சாதனம் சர்க்கியூட் போர்டில் சிப்களாக உள்ளன. கணினி தொடர்புடைய சாதனங்களின் செயல் திறனுக்கு அத்தியாவசியமானதாக ரேம் உள்ளது. இதன் திறன் அதிகம் உள்ள சாதனங்களின் செயல்பாடும் வேகமாக இருக்கும்.
தற்போது, ஸ்மார்ட் போன், லேப்டாப் போன்றவற்றின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் கூடிய நினைவக சாதனங்கள் உற்பத்தியில் கவனம் செலுத்துகின்றன.
ரேம் தயாரிப்பு குறைந்து தட்டுப்பாடு
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் கூடிய நினைவக சாதனங்கள் , இதற்கு ஏற்றாற்போல் ஏ.ஐ., 'சிப்' தயாரித்து வருகின்றன. டேட்டா சென்டர் எனப்படும் தரவு மையங்கள் தற்போது அதிக அளவில் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால், அவற்றுக்கு பெரிய அளவிலான நினைவக திறன் கொண்ட ரேம் தயாரிப்பில், நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன.
அதிக விலைக்கு வாங்கும் சூழ்நிலை
கம்ப்யூட்டர், லேப்டாப் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் ரேம் தயாரிப்பு குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அதை கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு, ஸ்மார்ட் போன், லேப்டாப் தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, லேப்டாப், ஸ்மார்ட்போன்களின் விலை இந்தாண்டில், 20 - 30 சதவீதம் வரை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.