இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதற்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என  மத்திய அரசின் ஜி.எஸ்.டி. ஆணையர்   சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

 

தன் படைப்புகளின் முழு காப்புரிமை உரிமையாளராக உள்ள ஒரு இசையமைப்பாளர், அந்த உரிமையை சம்பந்தப்பட்ட பட தயாரிப்பாளருக்கு வழங்கி விட்டால், சேவை வரியில் விலக்கு அளிக்கப்படும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

 

இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது படைப்புகளின் காப்புரிமையை முழுமையாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்காததற்காக, 6 கோடியே 79 லட்ச ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என, சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி., ஆணையர் 2019ஆம் அண்டு  நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

 

இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி கடந்த 2020 ஆண்டு பிப்ரவரியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

 

இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின், அதன் உரிமையாளர்கள் அவர்கள் தான் என்றும், தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார். தன் புகழுக்கு களங்கம் விளைவிக்கும்  வகையில் ஜி.எஸ்.டி. ஆணையர் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும், 6 கோடியே 79 லட்சம் ரூபாய் வரி செலுத்தவில்லை என கூறி, 6 கோடியே 79 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், ஜி.எஸ் டி.  நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

 

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஜி.எஸ்.டி. ஆணையர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படியிலேயே ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அவரது புகழை களங்கப்படுத்தும் நோக்கம் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

 

ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவு சேகரித்த தகவலின் அடிப்படையிலேயே வரி விதிக்கப்பட்டதாகவும், அதை செலுத்தாததால் அபராதமும் விதிக்கப்பட்டதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தயாரிப்பாளர்களுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், விசாரணையின்போது அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தபோது இசை குறிப்புகளை மட்டும் ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கவில்லை என்பதும், அவர் இசையமைத்து, பாடலாசிரியர்கள், பாடகர்கள், கருவி கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களின் சேவைகளை பயன்படுத்தி பதிவு செய்தார் என்பதும் கண்டறியப்பட்டதாகவும் பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளது.

 

ஜி.எஸ்.டி. துறையிலேயே மேல்முறையீடு செய்து தீர்வை பெறாமல் தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், வரி மற்றும் அபராத தொகைகளை வசூலிக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் எனவும் பதில் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.