தமிழகத்தில் தீவிரவாத தடுப்பு  படையை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு மீது அக்டோபர் 10ல் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.


 

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாகவும், ஆஃப்கானிஸ்தானில் தலிபான்களின் எழுச்சி காரணமாக இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

 இந்தியா மீதும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக மனுவில் கூறியுள்ள அவர், இலங்கையுடன் கடல் எல்லையை பகிர்ந்துள்ள தமிழகத்திற்கும் இதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். 

 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தாலும் கூட தீவிரவாத தாக்குதல் போன்ற நேரங்களில் அதனை எதிர்கொள்ள ஒரு சிறப்பு அமைப்பு தேவை என்பதால், மற்ற மாநிலங்களை போல தமிழகத்திலும் தீவிரவாத தடுப்பு பிரிவை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். 

 

மேலும் தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையை  தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிடக்  கோரியுள்ளார்.
  இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா தலைமையிலான அமர்வில் வரும் திங்கட்கிழமை (நாளை) விசாரணைக்கு வரவுள்ளது.