செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம்  அருகே  படாளம் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி கஞ்சா மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 11 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 60 கிலோ கஞ்சா மற்றும் ஒரு இரு சக்கர வாகனம், ஒரு கார், ஒரு மினி சரக்கு வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இவர்கள் ஆந்திரா, தமிழகம், பாண்டிச்சேரி, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு மொத்தமாக கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.



 

இது தொடர்பாக ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சங்கர் (24), ராமுடு (28), கார்த்திக் (28), பவுன் குமார் (24), சதீஷ்குமார் (34), பூமிநாதன் (24), விஜயகுமார் (29), சுபாஷ் (25), சங்கர் (25), சையத் முகமது இப்ராஹிம் (33) ஆகிய 11 பேரை கைது செய்தனர். இவர்கள் எந்த பகுதியில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து மொத்த விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர் என நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் போதை தடுப்பு பிரிவு போலீசார் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



 

அதேபோல் நேற்று, செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ஆந்திராவில் இருந்து செங்கல்பட்டிற்க்கு வந்த சர்கார் எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலை சோதனை செய்தனர். அப்போது அதில் தனி, தனி ரயில் பெட்டியில் இருந்த சுமார் ஐந்து லட்சம் மதிப்பிலான 30 கிலோ கஞ்சா 4 பைகளில் இருப்பதை கண்டுப்பிடித்தனர். மேலும் இந்த பைகள் யாருடையது, எங்கு எடுத்து செல்லப்படுகிறது என்பதையும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட கஞ்சாவை காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அடுத்தடுத்த நாட்களில் இருவேறு இடங்களில் 90 கிலோ அளவிற்கான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 

மனிதனை சுய நினைவை இழக்க செய்யும் போதைப்பொருளான கஞ்சா சென்னை புறநகர் பகுதியாக இருக்கும் செங்கல்பட்டு, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் கல்லூரி மற்றும் நிறுவனங்களில் வேலை பார்க்கும் இளைஞர்களை மையமாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது. அவ்வப்போது போலீசார் சோதனை நடத்தி கஞ்சாவை பறிமுதல் செய்தாலும், தொடர்ந்து இளைஞர்கள் மத்தியில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆந்திராவிலிருந்து வரும் தொடர்வண்டியை பயன்படுத்தி கஞ்சாவை நகருக்குள் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே போலீசார் சோதனை அதிகரித்து கஞ்சா வியாபாரிகளை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.