தமிழ்நாட்டில்  சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கோவிந்தவாடி, கால்வாய், துாசி மாமண்டூர் கால்வாய், கம்ப கால்வாய் ஆகியவற்றில் நீரோட்டம் அதிகரித்து வருகிறது , ஏரிகள் நிரம்பி வருகின்றன.

 

தடுப்பனைகள்

 

பாலாற்றில் தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால், பழையசீவரத்தில், 42 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பி வழிகிறது. இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட பாலாற்றில் உள்ள ஈசூர்- வள்ளிபுரம் மற்றும் வாயலுார் ஆகிய தடுப்பணைகளும் நிரம்பி வழிவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். செய்யாற்றில் உள்ள வெங்கச்சேரி தடுப்பணையும் நிரம்பியுள்ளது. பாலாற்றில் தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால், கம்ப கால்வாய் மூலம், 82 ஏரிகள் நிரப்ப முடியும் என, பொதுப்பணித் துறையினர் தெரிவிக்கின்றனர். பாலாற்றில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர் தற்போது உயர வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கின்றனர். நேற்றைய கணக்கெடுப்பின்படி, பாலாற்றில் 5000 கன அடி நீர் செல்கிறது.



 கடலுார் - வாயலுார் முகத்துவார படுகை தடுப்பணை பகுதியில், 5 அடி ஆழம் நீர் நிரம்பி, உபரி நீர் 7 செ.மீ., உயரத்தில், வினாடிக்கு, 1,360 க.அடி நீர் வீதம், நேற்று வெளியேறியது. இப்பகுதிக்கு, வடமேற்கில், ஈசூர் - வல்லிபுரம் தடுப்பணை பகுதியிலும், நீர் நிரம்பி, முகத்துவாரம் நோக்கி பெருக்கெடுக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அணை பகுதியில் வெளியேற்றப்பட்ட நீர், இப்பகுதியை அடைந்தால், உபரி நீர், 1 அடி உயரத்தில், வினாடிக்கு, 5,000 க.அடி வெளியேறும் என, பொதுப்பணி துறையினர் தெரிவித்தனர்.



ஏரிகள்

 

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 33 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில், 19 ஏரிகளும் முழுமையாக நிரம்பியுள்ளன. வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன்னரே, பாலாற்றிலும், செய்யாற்றிலும் நீர்வரத்து துவங்கியுள்ளது. பல ஏரிகள் முழுமையாக நிரம்பி வருகிறது.



இந்நிலையில், அடுத்த மாதம் துவங்கும் வடகிழக்கு பருவ மழைக்கு, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகளவில் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஏரிகள் மற்றும் குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிய வாய்ப்பு இருப்பதாகவே பொதுப்பணித் துறையினர் தெரிவித்து உள்ளனர்.  காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 52 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 120 ஏரிகள் 70%-100% ,  135 ஏரிகள் 50% - 75% , 185 ஏரிகள் 25% - 50% , 417 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவாக நிறைந்துள்ளதாக பொது துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.