Bus strike: அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் போராட்டம்: கிளாம்பாக்கத்தில் நிலைமை என்ன?
கிஷோர் | 09 Jan 2024 07:06 AM (IST)
தமிழ்நாட்டின் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தின் நிலைமை என்ன
கிளம்பாக்கம்
போக்குவரத்து தொழிலாளர்கள் அரசுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் நேற்றே பல இடங்களில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
போக்குவரத்து தொழிற்சங்கம் வேலைநிறுத்தம்
போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசதொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். பணியில் மரணமடைந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களின் பஞ்சப்படி நிலுவையை வழங்க வேண்டும் என 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, அண்ணா தொழிற்சங்க பேரவை, டி.டி.எஸ்.எப், பி.எம்.எஸ் உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.
போராட்டம் தொடங்கியது
ஜன.9-ல் வேலைநிறுத்தம் நடைபெறும் என கடந்த 5-ம் தேதி தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்தன. இந்நிலையில், 3-ம் கட்ட சமரச பேச்சுவார்த்தை, தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் ஆகியவற்றின் மேலாண் இயக்குநர்கள் முன்னிலையில், சிஐடியு தலைவர் சவுந்தரராஜன், அண்ணா தொழிற்சங்க பேரவைத் செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நடந்தது. இந்த பேச்சுவார்த்தையிலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
கிளாம்பாக்கம் பேருந்து நிலைமை என்ன ?
இந்தநிலையில் தொழிற்சங்கங்கள் நள்ளிரவு முதலே வேலை நிறுத்தம் நடைபெற துவங்கி உள்ளது. வேலை நிறுத்தம் துவங்கிய பொழுதும், வழக்கம்போல் பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்தநிலையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள, கிளாம்பக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவு முதல் பேருந்துகள் வழக்கமாக இயங்கத் துவங்கியிருக்கின்றன. அரசு சார்பில் 90 சதவீத பேருந்துகள் எந்தவித இடையூறும் என்று இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்துகள் வழக்கமாக சென்று வருகின்றன.
இரவு வேளையில் பேருந்துகள் குறைவாக இயக்கப்படும் நிலையில், பிரச்சனை இல்லாமல் சென்று வருவதாகவும், இருந்தும் நேரம் செல்ல செல்ல தான் உண்மை நிலவரம் தெரியவரும் என தெரிகிறது. இரவு நேரம் மற்றும் அதிகாலை நேரம் என்பதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்டம் குறைவாக இருப்பதால், பாதிப்பு ஏதும் ஏற்படாமல் உள்ளது.
வழக்கம்போல் செயல்படும்
இருந்தும் அதிகாரிகள் தரப்பில் 90% பேருந்துகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் செய்து வரும் நிலையில் பணிமனைகள் மற்றும் பேருந்து நிறுத்தத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வழக்கம்போல பேருந்துகள் ஓடுமா என மக்கள் அச்சமடைந்தனர். அதேசமயம் தொ.மு.ச., ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கங்களை கொண்டு மக்களுக்கு சிரமமின்றி பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால் வழக்கத்தை விட குறைவாக இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிமனை முன்பு பிற தொழிற்சங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து பணிமனைகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இயக்கப்படும் பேருந்தை தடுக்க நினைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.