செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கான நேரடி சேர்க்கை முகாம் 2024 ( Trade Apprentices Engagement Fair ) மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன்  தகவல்.


தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை:


தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை (பயிற்சிப் பிரிவு) சார்பாக தொழிற்பழகுநர் பயிற்சி நேரடி சேர்க்கை முகாம் (Trade Apprentices Engagement Fair) வருகிற 21.02.2024 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையில் செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் சென்னை மண்டலத்திற்குட்பட்ட அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் துறை சார்ந்த முன்னணிதொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.


திறன் பயிற்சி மையங்கள் 


NCVT மற்றும் SCVT முறையில் அரசு மற்றும் தனியார் ஐடிஐயில் தேர்ச்சி பெற்ற, இறுதி ஆண்டு தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கும் பயிற்சியாளர்கள், திறன் பயிற்சி மையங்களில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள், MES பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள்,8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிப்ளோமா மற்றும் டிகிரி கல்வித் தகுதியுடைய மாணவ/மாணவியர்களுக்கு நேரடியாக தொழிற்பழகுநர்களாக அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை தொழிற்பழகுநர் பயிற்சி பெற்று அசல் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (NAC) பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


NAC சான்றிதழ் 


இப்பயிற்சிக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.8000 முதல் ரூ.16000 வரை அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை சார்ந்த முன்னணி தொழிற்நிறுவனங்களில் வழங்கப்படுகிறது. NAC சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புக்கு முன்னுரிமையும், வயது வரம்பில் சலுகையும் உள்ளது. எனவே, இம்முகாமில் பங்கேற்கும் பயிற்சியாளர்கள் கல்வி சான்றிதழ் அசல் மற்றும் நகல்களுடன் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன்தெரிவித்துள்ளார்கள்.