தொல்லியல் சார்ந்த பொருட்கள்
செங்கல்பட்டு அருகே பாத்தூர் செட்டிமேடு பகுதியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமானம் பணி மேற்கொள்வதற்காக குழி எடுத்த பொழுது தொல்லியல் சார்ந்த பொருட்கள் கிடைத்துள்ளது. இதன் அடுத்து இதுகுறித்த தகவல் தொல்லியல் துறைக்கு தெரியவர, அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தநிலையில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதில் சில முக்கிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வரலாற்று ஆய்வாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5000 ஆண்டுகள் பழமை ( Excavation Chettimedu Pathur )
சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை சார்பில் , பாத்தூர் செட்டிமேடு பகுதியில் 24 நாட்களாக சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை தலைவர் டாக்டர். சௌந்தரராஜன் தலைமையில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், நேற்று புதிய கற்காலத்தை சேர்ந்த 9-முதல் 11-வயதுள்ள குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இந்த எலும்புக்கூடு தோராயமாக 5000 ஆண்டுகள் பழமையானது எனவும், தொல்லியல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
இங்கிருந்து, இரும்பு மற்றும் சங்க காலத்தை சேர்ந்த கருப்பு-சிவப்பு மற்றும் கருப்பு நழுவப்பட்ட பாத்திரங்களின் பானை ஓடுகள், பண்டைய கீறல் உள்ள பானை ஓடுகள், சுட்ட மண்ணால் செய்யப்பட்ட காதணிகள், இரும்பால் செய்யப்பட்ட வில்லின் முனை உள்ளிட்ட பல்வேறு பழமையான பொருட்களை எடுத்துள்ளனர். சுமார் 1.86-மீட்டர் ஆழத்தில் பழங்கால பொருட்கள் கிடைக்கப்பெற்று உள்ளதாகவும், தொடர்ந்து பல்வேறு பழங்கால பொருட்கள் கிடைக்கப் பெற்ற வருவதால் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு கிடைக்கப்பெற்ற எலும்புக்கூடுகளை மரபணு பரிசோதனை உள்ளிட்டவற்றை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
மரபணு பரிசோதனை
இதுகுறித்த ஆய்வு மேற்கொண்டவர்கள் கூறுகையில், ”அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட பொழுது வரலாற்று கால பொருட்கள் மற்றும் வரலாற்றுக்கு முந்தைய கால பொருட்கள் கிடைக்கப்பெற்றது. இரும்பு காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆகியவை கிடைத்தன. அதன் பிறகு மீண்டும் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது புதிய தற்காலத்தில் மக்கள் வாழ்ந்த பொழுது அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் ஆகியவை கிடைக்கப் பெற்றன. அதன் பின்னர் புதிய கற்காலத்தில் வாழ்ந்த ஒன்பது முதல் 11 வயது மதிப்புடைய ஒரு குழந்தையின் எலும்புக்கூடு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரிதாக சில இடங்களிலே இதுபோன்ற காலத்தில் எலும்புக்கூடுகள் கிடைத்தது. இப்பொழுது முழுமையாக எலும்புக்கூடு கிடைத்திருப்பது மிகவும் அரிது” என தெரிவித்தார்.