மூவரசம்பட்டு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நல திட்ட உதவிகள் விழாவில் மின்சாரம் இல்லாமல் வெகு நேரம் காத்திருந்த அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர். 

Continues below advertisement


பள்ளிகள் திறப்பு


ஜூன் 2ஆம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்பட்ட நிலையில் இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கான நோட்டு புத்தகம் வழங்கும் விழா தமிழக முழுவதும் உள்ள பள்ளிகளில் நடைபெற்று வருகிறது.


அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூவரசம்பட்டு ஊராட்சிக்கு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கான நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் மண்டலம் 12 குழு தலைவர் சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .


மின்சாரம் இல்லாமல் அவதி


இந்நிகழ்ச்சி காலை 10 மணிக்கு தொடங்க இருந்த நிலையில் மாணவ, மாணவிகள் வெயிலில் காத்திருந்த பின்னர் காலை 10:30 மணிக்கு அமைச்சர் பள்ளி அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தார். அப்பொழுது திடீரென பள்ளியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், நிகழ்ச்சி மேடைக்கு வராமல் சுமார் 20 நிமிடம் அமைச்சர் பள்ளி தலைமை ஆசிரியர் அலுவலகத்தில் காத்திருந்தார். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் வந்த பின்னும் மின்சாரம் வராததால் அவரும் தலைமை ஆசிரியரின் அலுவலகத்திலேயே காத்திருந்தார். 


அப்பொழுது கட்சி நிர்வாகிகள் மற்றும் பத்திரிகையாளர்களை உள்ளே வீடியோ எடுக்காமலும் வராமலும் பார்த்துக் கொண்டனர். அதன் பின்னர் மின்வாரிய அதிகாரிகளிடம் பேசிய நிலையில் மின்சாரம் வழங்கப்பட்டது. பின்னர் இருவரும் விழா மேடைக்கு வந்து சேர்ந்தனர். நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த பொழுது கொடியேற்று நிகழ்வும் நடைபெற்றது. அப்பொழுது அமைச்சர் தா.மோ அன்பரசன் மற்றும் ஆட்சியர் ஒன்று சேர்ந்து தேசிய கொடியை ஏற்றிவிட்டு அதனை கவனிக்காமல் கூட வணக்கம் வைத்துவிட்டு சென்றனர்.


சரி செய்யப்பட்ட தேசியக்கொடி


தேசியக்கொடியை ஏற்றுவிட்ட பின்னர் தான் கொடி தலைகீழாக ஏற்றி இருப்பது. தெரியவந்தது உடனடியாக அங்கிருந்த ஆசிரிய பெருமக்கள் கொடியை மீண்டும் கீழே இறக்கி அதனை சரி செய்து கொண்டிருந்தனர். அதற்கிடையில் கொடி பாட்டும் பாடி முடிக்கப்பட்டது .


கொடிக்கம்பத்தில் கொடி இருக்கும் நேரத்தில் பாட வேண்டிய கொடி பாட்டு ஆசிரியர்கள் கொடியை சரி செய்து கொண்டிருக்கும் பொழுது பாடப்பட்டது. பின்னர் ஒரு வழியாக கொடியை சரிப்படுத்தி பறக்க விட்டனர்.


அரசு விழாவில் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டிருக்கும்போதும், இவ்வாறு மின்சாரம் இல்லாததும் மற்றும் தேசிய கொடியை தவறுதலாக ஏற்றியததை கூட அறியாத மாவட்ட ஆட்சியரின் செயலும் அங்கிருந்தவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.


அமைச்சர் பேசியது என்ன ?


இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பேசியதாவது, மாணவர்களுக்கு கற்றல் தடைபடாமல் இருப்பதற்காக தமிழ்நாடு அரசு ஒன்று முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு பள்ளி பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள், உலக வரைபடம், வண்ண பென்சில்கள், காலனிகள், மற்றும் மிதிவண்டிகள் உள்ளிட்டவற்றை வழங்குகிறார்கள். 


மேலும், மாணவர்களின் கல்லூரி கனவை நிறைவேற்றிடும் வகையில் கல்லூரி கனவு நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களுக்கு கல்லூரி படிப்பு சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்யூர் பகுதியை சுற்றியுள்ள மாணவர்களின் கல்லூரி கனவை நிறைவேற்றிட இந்த கல்வியாண்டில் செய்யூரில் புதிதாக அரசு கலைக்கல்லூரி துவங்கப்பட்டுள்ளது. மேலும், மேல்நிலைப்பள்ளி இரண்டாம் ஆண்டு படித்த தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கு கல்லூரி சேர்க்கைக்கான கட்டணம் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மூலமாக செலுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் மூலம் 156 மாணவர்களும், தமிழக அரசின் மூலம் தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்ற உயர்ந்த திட்டத்தின் மூலம் 10457 மாணவர்களும் பயனடைந்துள்ளனர் என தெரிவித்தார்.