Chengalpattu Railway Station Renovation: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்தால், நாள் ஒன்றுக்கு 1 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்ட ரயில் நிலையமாக செங்கல்பட்டு ரயில் நிலையம் மாறும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Continues below advertisement

வளரும் செங்கல்பட்டு மாவட்டம் 

சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு, மிக முக்கிய நகரமாக வளர்ந்து வருகிறது.‌ குறிப்பாக சென்னை புறநகர் பகுதியில் அதிக அளவு வேலைவாய்ப்பு உருவாகி வருவதால், செங்கல்பட்டு ரயில் நிலையத்தை பயன்படுத்தபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டை சுற்றி மகேந்திரா சிட்டி, திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் புதிய தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அதிகளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. 

இதனால் சென்னை புறநகர் பகுதி மற்றும் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் வெளிமாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் குடியேறுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பு குறைவாக இருப்பதால் செங்கல்பட்டு மற்றும் சென்னையில் நோக்கி படையெடுத்து வருகின்றனர். அதேபோன்று செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதிகளில், கணிசமான அளவு வெளிமாநில தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

Continues below advertisement

செங்கல்பட்டு ரயில் நிலையம் - Chengalpattu Railway Station

இதனால் செங்கல்பட்டு ரயில் நிலையம் மிக முக்கிய ரயில் நிலையமாக மாறி வருகிறது. வெளிமாநிலங்களுக்கு செல்பவர்கள் செங்கல்பட்டு ரயில் நிலையத்தை பயன்படுத்தி, சென்னை சென்ட்ரல் மற்றும் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர். தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், சென்னைக்கு உள்ளே சென்றால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி விடுவோம் என்பதால், செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து தங்களது பயணத்தை தொடர்கின்றனர். இதனால் செங்கல்பட்டு சென்னை புறநகர் பகுதியில் முக்கிய ரயில் நிலையமாக உருவெடுக்க தொடங்கியுள்ளது.  

செங்கல்பட்டு ரயில் நிலையம் மறு சீரமைப்பு - Chengalpattu Railway Station Redevelopment 

செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து, புறநகர் ரயில் சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தை தினமும் சுமார் 60 ஆயிரம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். அடுத்த சில ஆண்டுகளில் 50 சதவீதத்திற்கு அதிகமானோர் கூடுதலாக ரயில் நிலையத்தை பயன்படுத்துவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பயணிகள் அதிகரித்து வருவதால், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சுமார் 22.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு ரயில் நிலையம் மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு புதிய வசதிகள் என்னென்ன ?

புதிய தொழில்நுட்பத்துடன் செங்கல்பட்டு ரயில் நிலையத்தின் டிசைன் அமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் தகவல் பலகைகள், பயணிகள் ஓய்வெடுக்க குளிரூட்டப்பட்ட 3 ஓய்வு அறைகள், கூடுதல் வாகனம் நிறுத்தும் வசதி, லிப்ட் மற்றும் எக்ஸ்குலேட்டர் வசதிகள் செய்து தரப்பட உள்ளன. அதேபோன்று நவீனமயமாக்கப்பட்ட, வானிலை பாதிக்காத நடைமேடை கூரைகள் அமைக்கப்பட உள்ளன. நடைமேடைகளில் பயணிகள் அமர்வதற்கான கூடுதல் இருக்கைகளும் வசதி செய்யப்படவுள்ளன.

பணிகள் முடிவடைவது எப்போது? 

செங்கல்பட்டு ரயில் நிலையம் மேம்பாட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு பணிகள் 90 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகின்ற தீபாவளிக்குள் அனைத்து பணிகளையும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.