174 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை மீட்ட  நெல் ஜெயராமனின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாரம்பரிய நெல் மீட்பாளர் நெல் ஜெயராமன். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் முதன்மை சீடர். தமிழகம் முழுவதும் பாரம்பரிய நெல் ரகங்கள் அழிந்து வந்த நேரத்தில் அதனை மீட்கும் வகையில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் காட்டுயானம் என்கிற பாரம்பரிய நெல் ரகத்தை நெல் ஜெயராமனிடம் கொடுத்தார். இந்த ஒரு நெல்லிலிருந்து 174 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த பெருமை நெல் ஜெயராமனை சாரும்.


நெல் ஜெயராமன்



குறிப்பாக சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, காட்டுயானம், கருப்புகவுனி, இலுப்பைப்பூ சம்பா உள்ளிட்ட 174 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தவர் நெல் ஜெயராமன். இதில் பல மருத்துவ குணம் உடைய நெல் ரகங்களும் உண்டு. வருடம் தோறும் பாரம்பரிய  நெல் திருவிழாவை தொடர்ந்து நடத்தி வந்தவர். 12 நெல் திருவிழா இவர் தலைமையில் நடந்துள்ளது. குறிப்பாக ஒவ்வொரு விழாவிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகளிடம் ஒரு விவசாயிக்கு ஒரு கிலோ பாரம்பரிய நெல் ரகங்களை கொடுத்து அடுத்த ஆண்டு வரும் பொழுது அதனை இரட்டிப்பாக அவர்களிடமிருந்து பெற்று தமிழகம் மட்டுமின்றி கேரளா ஆந்திரா கர்நாடகா என பல மாநிலங்களில் பாரம்பரிய நெல் விவசாயத்தை கொண்டு சேர்த்த பெருமைக்கு உரியவர்

 

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுத்ததற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களின் கையால் அடிதட்டு மக்களுக்காக பணியாற்றி வருகிறார் என்ற விருதைப் பெற்றுள்ளார். இதேபோன்று தமிழக அரசிடம் இருந்தும் விருதுகளை நெல் ஜெயராமன் பெற்றுள்ளார். மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பாரம்பரிய நெல் ரகங்களில் உள்ள பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தனர் ஜெயராமன்.



இந்த நிலையில் கடந்த டிசம்பர் 2018ம் ஆண்டு 6ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் நெல் ஜெயராமன். இவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழக அரசு நீடாமங்கலத்தில் நெல் ஜெயராமன் பெயரில் நெல் பாதுகாப்பு மையம் தொடங்கப்படும் எனவும் அறிவித்து இருக்கிறது. நெல் ஜெயராமன் உயிர் இழந்தாலும் அவருடைய நோக்கமான, பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இன்னும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள் என்பது அவரின் நினைவு நாளான இன்று அவருக்கு அளிக்கப்படும் மரியாதையாகவே பார்க்கப்படுகிறது. நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஆதிரங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜ் தலைமையில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து நரிக்குறவர் இன மக்களுக்கு பாரம்பரிய அரிசியால் சமைக்கப்பட்ட உணவினை வழங்குகிறார்  மேலும் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்கள் இன்று வழங்கப்படுகிறது. இந்த நிகழ்வில் ஏராளமான இயற்கை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்