‛வந்தான்... சுட்டான்... போனான்...’ இந்த டயலாக் ரிபீட் ஆக காரணம், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு படம் ஹிட் அடிக்கும் போது, அதில் இடம் பெறும் வசனமும் ஹிட் அடிக்கும். ஏன்... சில நேரம் அந்த வசனம் தான், படத்தையே ஹிட் அடிக்க வைக்கும், படத்தின் அடையாளமாக கூட மாறும்.


அப்படி ஒரு டயலாக் தான்,சமீபத்தில் வெளியான மாநாடு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த ‛வந்தான்... சுட்டான்... போனான்... ரிபீட்டு...’ டயலாக். படத்தின் ட்ரெய்லர் வெளியான போதே, அந்த டயலாக்கை பிரதானமாக வைத்திருந்தார், இயக்குனர் வெங்கட் பிரபு. காரணம், படத்தின் கதையும் அது தான். அது ஒருவகையான குறியீடாக பார்க்கப்பட்டது.

படம் வெளியாகி ஹிட் அடித்த பின் அந்த டயலாக்கை ஒரு வழியாக தமிழ் சமூகம் கெட்டியாக பிடித்துக் கொண்டு விட்டது., எதற்கெடுத்தாலும், அந்த பார்மட்டை பயன்படுத்தி பதிவுகள் வரத் தொடங்கிவிட்டன. ‛ஆபீஸ்... வீடு... தூக்கம்... ஆபிஸ்... ரிபீட்டு..’ இப்படி ஒரு தரப்பும், ‛சமையல்... வேலை... தூக்கம்... சமையம்...’ என ஒரு தரப்பும், தங்களின் அன்றாட நிகழ்வுகளை வசனத்தோடு ஒப்பிட்டு சமீபத்தில் அதிக பதிவுகளை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.



ஆனால்... இதே டயலாக்கை 36 ஆண்டுகளுக்கு முன் ரஜினிகாந்த் படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பது எத்தனை பேருக்கு தெரியும். நடிகர் விஜய்யின் தந்தையான  எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 1985ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி வெளியான திரைப்படம் ‛நான் சிவப்பு மனிதன்’. 

கல்லூரி பேராசிரியரான நடிகர் ரஜினிகாந்த், தன் தங்கையின்  இறப்பிற்குப் பின் ராபின் ஹூட்டாக மாறி, தீமை செய்பவர்களை அழித்து, நல்லவர்களுக்கு உதவும் கதை. குற்றவாளியை கண்டுபிடிக்க சிறப்பு அதிகாரியாக பாக்கியராஜ் விசாரணை நடத்துவதும், ரஜினியால் காப்பாற்றப்பட்டவர்கள் அவருக்க உதவுவதும் என விறுவிறு திரைக்கதையோடு பயணிக்கும் படம் அது. 

அந்த படத்தில், ரஜினியால் காப்பாற்றப்பட்ட ஒருவரை போலீசார் விசாரிக்கும் போது,  ‛வந்தது ராபின் ஹூட்... இவனுங்களெல்லாம் பொறுக்கி பசங்க.. வந்தான்... சுட்டான்... போயிட்டான்...’ என ஏட்டு ஒருவர், உயர் அதிகாரியிடம் ரஜினியை விளக்குவார். 


 

இப்போது , அந்த வசனத்தை பிடித்துக் கொண்டார்கள் ரஜினி ரசிகர்கள். எங்க தலைவர் படத்தில் வந்த வசனத்தை தான் ரிபீட்டா யூஸ் பண்ணிருக்காங்க... என பதிவு போடத் தொடங்கிவிட்டனர். 

நான் சிவப்பு மனிதனும் ஒரு வகையான சேஸிங் படம் தான், மாநாடும் ஒரு வகையான சேஸிங் படம் தான். நான் சிவப்பு மனிதன் படத்திலும் ்அந்த வசனத்தை போலீஸ்காரர் தான் பேசுகிறார். மாநாடு படத்திலும் போலீஸாக வரும் எஸ்.ஜே.சூர்யா  தான் பேசுகிறார். இப்படி பல ஒப்பீடுகள் அந்த டயலாக்குடன் ஒத்துப் போகிறது. இவையெல்லாம் தற்செயலாக நடந்தவை தான். ஆனால், காலம் கடந்தும் அவை கனெக்ட் ஆகிறது.