கேரளாவை உலுக்கிய கூடத்தாய் சயனைடு கொலை வழக்கானது Curry & Cyanide: The Jolly Joseph Case என்ற பெயரில் ஆவணப்படமாக வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அந்த ஆவணப்படம் பற்றிய தொகுப்பை காணலாம். 


வழக்கின் பின்னணி 


 கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள கூடத்தாய் கிராமத்தில் டாம் தாமஸ், அவரது மனைவி அன்னம்மா, மகள் ரெஞ்சி வில்சன், மூத்த மகன் ராய் தாமஸ், இளைய மகன் ரோஜோ தாமஸ் ஆகியோர் வாழ்ந்து வந்தனர். இதில் ராய் தாமஸ், விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த தனது உறவுக்கார பெண்மணியான ஜாலி ஜோசஃப் என்பவரை காதலித்து 1997 ஆம் ஆண்டு திருமணம் செய்கிறார். 


தான் ஒரு எம்.காம் பட்டதாரி என சொல்லி மெத்த படித்த, ஓய்வு பெற்ற ஆசியர்களான டாம் தாமஸ் - அன்னம்மா குடும்பத்தில் மருமகளாக வருகிறார். நன்கு படித்துவிட்டு சும்மா இருக்க வேண்டாம் என அன்னம்மா ஜாலி ஜோசஃப்பை தொடர்ந்து வலியுறுத்துகிறார். இதற்கிடையில் ஜாலி ஜோசஃப்புக்கு குழந்தை பிறக்கிறது. ஆனால் அன்னம்மா தொடர்ந்து வேலைக்கு செல்லுமாறு வலியுறுத்தி வருகிறார். 


இந்நிலையில் 2002 ஆம் ஆண்டு அன்னம்மாவும், 2008 ஆம் ஆண்டு டாம் தாமஸூம், 2011 ஆம் ஆண்டு ராய் தாமஸூம், 2014 ஆம் ஆண்டு ராயின் தாய் மாமா மேத்யூ மஞ்சாடியில், உறவுக்கார பெண்மணி சிலியின் குழந்தை அல்ஃபின், 2016 ஆம் ஆண்டு சிலி ஆகியோர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறக்கிறார்கள். இவர்கள் சயனைடு கலந்து கொள்ளப்பட்டதாக ராய் தாமஸ் சகோதரி ரெஞ்சி வில்சன், சகோதரன் ரோஜோ தாமஸ் இருவரும் காவல்துறைக்கு செல்கின்றனர். இந்த வழக்கு தொடர்பான புகார் கிட்டதட்ட 18 ஆண்டுகளுக்கு பின் தான் அளிக்கப்படுகிறது. இன்றளவு ஜாலி ஜோசஃப் வழக்கு நடந்து வருகிறது.  


ஆவணப்படமாக சரியா? 


ஒருவேளை சிலருக்கு இந்த வழக்கு என்னவென்று தெரிந்திருக்கலாம். ஆனால் என்ன வழக்கு என தெரியாமல் பார்க்கும் அனைவருக்கும் இது ஒரு சர்ப்ரைஸ் தான். கிட்டதட்ட 1 மணி நேரம் 37 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப்படம் ராய் தாமஸின் சகோதரி ரெஞ்சி, ஜாலி ஜோசப் மூத்த மகன் ரெமோ, ஓய்வு பெற்ற காவல் அதிகாரி, ஜாலி ஜோசப் தரப்பு வழக்கறிஞர், பத்திரிகையாளர், சமூக ஆர்வலர் என பலரின் பார்வையில் காட்சிகளாக விவரிக்கப்படுகிறது. எங்கேயும் சலிக்காமல் நகர்த்தப்படும் இந்த Curry & Cyanide: The Jolly Joseph Case அனைவரும் காணக் கூடிய ஒன்று தான். 


ஆனால் போலி கல்விச் சான்றிதழ் உருவாக்கியது, கல்லூரி வேலை, தடயமே தெரியாமல் கொலை, அதில்  செய்த தவறு, வெளிப்படையாக சிக்கியும் கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித சந்தேகமும் இல்லாமல் இருந்தது என ஜாலி ஜோசஃப் கேரக்டர் நம் அனைவருக்குமே ஒரு பெண்மணியாக ஆச்சரியத்தையே ஏற்படுத்துகிறார். 


அதேசமயம் உண்மையில் கொலைக்கான காரணங்கள் அதிகார ஆசையா? பணத்தின் மேலான பற்றா?  என எந்த கேள்விகளுக்கும் நம்மிடம் விடையில்லை. காரணம் தடையமே இல்லாமல் சம்பவம் செய்யும் ஜாலி ஜோசஃப் செய்த குற்றங்களான காரணங்கள் பெரிய அளவில் இல்லை. சொல்லப்போனால் அனைத்து கொலைகளுக்கும் ஒரே காரணம் இல்லை அதுதான் இந்த வழக்கில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கியது. தோண்ட தோண்ட வழக்கு வேறு வேறு பக்கமாக செல்வது காண்பவர்கள் நமக்கே ஒருவித அதிர்ச்சியை  உண்டாக்குகிறது. ‘எவ்வளவு பாவங்கள் செய்தாலும் ஆண்டவர் மன்னிப்பதாக பைபிளில் சொல்லப்பட்டுள்ளதே. அதுபோல நானும் மன்னிக்கப்படுவேன்” என ஜாலி சொன்னதாக கூறப்படும் சம்பவம் கொலைகள் செய்ததற்கு அவர் வருத்தமே படவில்லை என்பதை காட்டுகிறது. 


இந்த 6 பேர் கொலை வழக்கில் 2019 ஆம்  ஆண்டு தான் ஜாலி ஜோசஃப் கைது செய்யப்படுகிறார். தொடர்ந்து இவ்வழக்கு கோர்ட்டில் நடந்து வரும் நிலையில் செய்திகளை அடிப்படையாக கொண்டு இந்த ஆவணப்படத்தை குறைகள் இருந்தாலும் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கிறிஸ்டோ டாமி. நிச்சயம் ஒருமுறையாவது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படத்தை காணுங்கள்.